பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மருத்துவக்கழிவுகள், மின்னணுக்கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளில் கேரள அரசு கொட்டுவதை முதல்வர் ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை என கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து நாராயணன் திருப்பதி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில், தென்காசி மாவட்டம், கரும்பனூரில் கணினிகளின் உதிரிபாகங்கள், செல்போன்கள், உபயோகிக்கப்பட்ட பேட்டரிகள், வாகன உதிரிபாகங்கள், மருத்துவக்கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் திறந்த வெளியில் கொளுத்தப்பட்டன. இதனால் கரும்பனூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களிலுள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உருவாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மேற்கண்ட கழிவுகள் அனைத்தும் கேரளாவிலிருந்து தமிழ்நாடு எல்லை கிராமங்களுக்குக் கொண்டுவரப்பட்டு எரிக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. கழிவு மேலாண்மையில் கேரளா முதலிடம் வகிப்பதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா என்றும், கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளைச் செய்திருக்கிறது என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது என்றும் பெருமையாக மார்தட்டிக்கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறது தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

ஆனால், மருத்துவக்கழிவுகள், மின்னணுக்கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் லாரிகளில் எடுத்துச் சென்று அண்டை மாநிலமான நம் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் கரும்பனூரில் எரித்து தமிழர்களின் உயிருக்கு உலை வைக்கிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு. கடந்த பல மாதங்களாக, கேரளாவிலிருந்து லாரிகளில் கொண்டுசெல்லப்பட்டு, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் மின்னணு, மருத்துவக்கழிவுகளை நீர்நிலைகளில் கரைப்பது அல்லது எரிப்பது என தமிழகத்தை தன் குப்பைத்தொட்டியாக கேரள அரசு கருதிவருவது தொடர்கதையாகிவிட்ட நிலையில், இது குறித்து கடந்த மாதம் நாம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது.
மேலும், கடந்த மாதம் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்மீது குண்டர் சட்டம் பாயும் என்றும், இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், நேற்றைய தினம் கரும்பனூரில் மின்னணுக்கழிவுகள் எரிக்கப்பட்டு மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசு, அதிகாரிகளின் அலட்சியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
மாவட்ட எல்லைகளில் அமைந்திருக்கும் போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனைச்சாவடிகளிலுள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதுதான் இந்த அவல நிலைக்குக் காரணம். காவல்துறை, போக்குவரத்துத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டே மக்களின் வாழ்வில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். உள்ளாட்சித்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமே இந்த முறைகேட்டில், சுகாதார சீர்கேட்டில், சுற்றுப்புறச்சூழலின் அழிவில் பங்குபெற்றுக்கொண்டிருக்கிறது.
லஞ்ச, ஊழலே இந்தச் சீரழிவுக்குக் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ... நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று... இந்த கொடுமைக்கு பொறுப்பேற்கப்போவது யார்... கரும்பனூரில் நடைபெற்ற இந்த நாசகார வேலையைத் தடுக்க முடியாத அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இனி மின்னணு, மருத்துவக்கழிவுகள் கேரளாவிலிருந்து தமிழ்நாடு எல்லைக்குள் வருவது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும். சமீபத்தில் கேரளா சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வரிடம் தமிழர்களை பாதிக்கும் இந்த விவகாரம் குறித்து தன் கண்டனத்தைத் தெரிவித்தாரா... இல்லையெனில், தமிழகத்தை தன் குப்பைத்தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளாவைக் கண்டிக்காதது ஏன்... என்பதை முதல்வர் விளக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.