Tamil News Live Today: இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா மறைவு - முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை இரங்கல்

Tamil News Live Today: 03-05-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
மனோபாலா மறைவு... முதல்வர் இரங்கல்!

தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை இரங்கல்..!
தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``பிரபல திரைப்பட இயக்குநரும், சிறந்த நடிகருமான மனோபாலா அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தமிழக பா.ஜ.க சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ``திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான திரு.மனோபாலா அவர்களின் மறைவு திரையுலலில்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராதிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா காலமானார்!

தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. இவர்` ஊர்க்காவலன்’, `மல்லுவேட்டி மைனர்’, `சிறைப்பறவை’, `ஆகாய கங்கை’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். தவிர தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் வலம் வந்தவர் மனோபாலா.
ரேஷன் கடைகளில் முதன்முறையாக கேழ்வரகு வழங்கும் திட்டம்: ஊட்டியில் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்!
சென்னை ஐபிஎல்: மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட்டுகள் வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு!
பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் காவல் சரகத்தில், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்வீர் சிங் ஐ.பி.எஸ்-மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவுசெய்திருக்கிறது.
வேங்கைவயலில் மே 6-ம் தேதி நீதிபதி சத்தியநாராயணன் நேரடி விசாரணை!

வேங்கைவயலில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வருகிற 6-ம் தேதி ஒரு நபர் ஆணையம் நேரடி விசாரணை மேற்கொள்கிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பிறகு, நீதிபதி சத்தியநாராயணன் வேங்கைவயலுக்குச் சென்று விசாரிக்கிறார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கக் கோரிக்கை!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில், நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கக் கோரி வங்கிகளுக்கு, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடிதம் எழுதியிருக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துவரும் நிலையில், ஏற்கெனவே பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில், ``தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறது.