Tamil News Live Today: ``டெண்டர் தாக்கலுக்கு அதிகாரிகளின் கணினியைப் பயன்படுத்தி முறைகேடு!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Tamil News Live Today: 25-04-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
``டெண்டர் தாக்கலுக்கு அதிகாரிகளின் கணினியைப் பயன்படுத்தி முறைகேடு!" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`குட்கா பொருள்களுக்குத் தடை விதிக்கலாம்' - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

புகையிலைப் பொருள்களுக்கான தடையை ரத்துசெய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து, புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
வேங்கைவயல் விவகாரம்; ரத்த மாதிரிகள் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைப்பு!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரிகளை சி.பி.சி.ஐ.டி போலீஸார், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். 8 பேர் ரத்த மாதிரி தராதது குறித்து, நீதிபதியின் உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
அலுவலகத்துக்குள் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக் கொலை!

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்த கும்பல் ஒன்று, வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டியது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வேங்கைவயல் விவகாரம்; டி.என்.ஏ பரிசோதனைக்கு 8 பேர் ஆஜராக மறுப்பு

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக, இன்று காலை டி.என்.ஏ பரிசோதனை தொடங்கியது. இந்த நிலையில், டி.என்.ஏ சோதனைக்கு 8 பேர் ஆஜராக மறுப்பு தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
வேங்கைவயல் விவகாரம் - டி.என்.ஏ பரிசோதனை தொடக்கம்!

வேங்கைவயல் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று டி.என்.ஏ பரிசோதனை தொடங்குகிறது. 11 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
ஜி ஸ்கொயர்: இரண்டாவது நாளாகத் தொடரும் ரெய்டு!

தமிழ்நாட்டில் `ஜி ஸ்கொயர்' நிறுவனத்துக்குச் சொந்தமான, தொடர்புடைய சென்னையில், அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, திருச்சி, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில், பெங்களூரு, மைசூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் என மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். நேற்று தொடங்கிய இந்த ரெய்டு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
பாகிஸ்தான்: காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு... 13 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் சிக்கி13 பேர் பலியாகிருக்கின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இது குறித்து காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத், "அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததால், அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். வெளியிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்திருக்கிறோம். இவர்களில் சிலரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.