சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டிலுள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து சங்கர், தரணிவேலுவும் சுருண்டு விழ இவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கிவிழ அவர்களும் ஜிப்மர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். எஞ்சிய பேர் தொடர் சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.
தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாகக் கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் எக்கியார்குப்பத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் எக்கியார் கிராம மக்கள், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையைக் கண்டித்து கிழக்குக் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தைக் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் தலைமறைவாக இருக்கின்றனர், அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், செங்கல்பட்டில் ஓர் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். காவல்துறையின் மது விலக்கு பிரிவின் வேட்டை முடுக்கி விடப்பட்டிருக்கிறது” என்றார்.

இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பாக, வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 88 கள்ளச்சாராய வியாபாரிகள்மீது வழக்கு பதிவுசெய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் 57 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசுமீது பலர் விமர்சனம் வைத்து வரும் நிலையில், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், ‘அரசே மதுவிற்கும் நிலையில் கள்ளச்சாராய சாவுகள் ஏன்?’ என்கிற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியானதற்கு தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது. 30-க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர். அதுபோல, செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரை அடுத்த, பெருங்கரணை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் பலியாகியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரே நாளில், கள்ளச்சாராயத்துக்கு 11 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இல்லை. தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் மதுக்கடைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் அதிகமாகி ஏராளமான சீரழிவுகள் ஏற்படுகின்றன. விபத்துகளும் அதிகரிக்கின்றன. வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழ்நாட்டில்தான் இளம் விதவைகள் அதிகம் இருக்கின்றனர். இதற்கு அரசே மதுக்கடைகளையும், மதுபான பார்களையும் நடத்துவதுதான் காரணம். இவற்றையெல்லாம் எடுத்துக்கூறி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க அரசை வலியுறுத்தினால், `மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகமாகிவிடும்’ என்று எப்போதும் ஒரு காரணத்தைக் கூறுவார்கள்.
ஆனால், இப்போது மதுவிலக்கு அமலில் இல்லாத நிலையில், எங்கும் தாராளமாக மது கிடைக்கும் நிலையில், ஒரே நாளில் இரு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க அரசும், காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு சில காவல்துறை அதிகாரிகளை மட்டும் தற்காலிகப் பணி நீக்கம் செய்து தப்பித்துவிடலாம் என நினைப்பது தவறு. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசே மது பானங்களை விற்கும் நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சி, விற்கப்படுவது ஏன்... டாஸ்மாக் மதுக்கடைகளில் வாங்காமல், கள்ளச்சாராயம் வாங்குவது ஏன்... என்பதற்கான காரணங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும். இதற்கு வறுமை மிகமிக முக்கியக் காரணம். எனவே, கிராமங்களில் வறுமையைப் போக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில சுயநல சக்திகள், அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகளையும் அவர்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார பலம் கொண்டவர்களைக் கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாடு மக்களின் அமைதியான வாழ்க்கை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுவிலக்குத்துறைதான், டாஸ்மாக் மதுக்கடைகளையும் நடத்துகிறது. அந்தத் துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையை அதிகப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும். மதுவிலக்குத்துறையின் அலட்சியம் பொறுப்பின்மையும்தான் கள்ளச்சாராய விற்பனைக்குக் காரணம். எனவே, கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்க மதுவிலக்குத்துறை கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, தற்போது கள்ளச்சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது தி.மு.க அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தன் கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார்.