கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தில் பா.ஜ.க சிறுபான்மை அணி மாநிலச் செயலாளர் சதீஷ் ராஜா இல்ல விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``சிலர் திராவிட மாடல் குறித்துப் பேசி வருகிறார்கள். திராவிடர்கள் என்றால் என்ன என அவர்கள் விளக்க வேண்டும். கிட்டத்தட்ட 50, 60 ஆண்டுகளாகத் திராவிட மாடலில்தான் ஆட்சி நடைபெறுகிறது. இன்றும் கூட தமிழகத்தில் தனித்தனி சாதியினருக்கு தனித்தனியாகச் சுடுகாடுகள் உள்ளன. தமிழகத்தில் இன்றும் பல கோயில்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.
பல கிராமங்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. இதுதான் திராவிட மாடலா? சாதிக்கொரு சுடுகாடு வைத்துக் கொள்வதுதான் திராவிட மாடலா? இதைக் கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா? 2014-க்கு பிறகுதான் தாய்மார்கள் வங்கிக்கணக்கு தொடங்கினார்கள். 2014-க்கு முன்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருந்தார்கள். தற்போது அதுபோன்ற நிலையே கிடையாது. உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடிதான். வெட்கம் இல்லாமல் எதைத் திராவிட மாடல் என்று தி.மு.க-வினர் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
மீன்வளத் துறையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பாரத பிரதமராக மோடி வந்த பிறகுதான் மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான மீனவர் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிக அளவு மீன்பிடி துறைமுகங்கள் செயல்பட்டு வருகிறது என்றால் அதற்கு மத்திய அரசுதான் காரணம். மீனவர்களுக்கு மானிய விலையில் ஆழ்கடல் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் வழங்கி வருகிறோம். இன்று உலக அளவில் மீன் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600-க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது மத்திய அரசு. தி.மு.க அரசு வழங்கியது ஒரு பொய்யான தேர்தல் அறிக்கை. தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்கள்... எங்குப் போனது அந்த ஆயிரம் ரூபாய். ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு திராவிட மாடல் ஆட்சி எனச் சாதனை விளம்பரம் கொடுத்திருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றி விட்டது.
2014-க்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளன. தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது. உள்ளாட்சி வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசைக் குற்றம்சாட்டுவது தவறு. தமிழக அரசு பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றுள்ளது. அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழி போடுவதை ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்" என்றார்.