மதுரையில், நடைபெற்ற தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் அமைச்சர் பி.டி.ஆர் கலந்துகொள்ளாதது மதுரை மாநகர தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே மதுரை மாவட்ட தி.மு.க நிர்வாகிகளுக்கும் அமைச்சர் பி.டி.ஆருக்குமிடையே ஏழாம் பொருத்தமாக இருந்துவந்தது. தனக்கென்று ஓர் ஆதரவாளர் கூட்டத்தோடு பி.டி.ஆர் தனியாகச் செயல்பட்டுவந்தார். தனிக் கூட்டமெல்லாம் நடத்தியது பரபரப்பாகி கட்சித் தலைமை கண்டித்து, `மாநகரச் செயலாளர் கோ.தளபதியோடு ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியது. ஒற்றுமைக் கூட்டமெல்லாம் நடத்தியும் `ஒற்றுமை ஏற்படவில்லை’ என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.
இந்த நிலையில், சமீபத்தில் தி.மு.க தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து பி.டி.ஆர் பேசியதாகச் சொல்லப்பட்ட ஆடியோ பரவி கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்க, பலவித யூகத் தகவல்கள் வெளியே வலம் வந்தன. அதை வைத்து அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க-வுக்கு நெருக்கடியைக் கொடுத்துவருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனையை விளக்கி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க தலைமை உத்தரவிட்டிருக்கிறது. மதுரை புறநகர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, மணிமாறன் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்திவருகிறார்கள்.
மதுரை மாநகருக்குள் 19 இடங்களில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 7-ம் தேதி முதல் நடந்துவருகிறது. தலைமைக்கழகப் பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டங்களில் மாவட்ட அமைச்சர் என்ற முறையிலோ, மத்திய தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையிலோ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயர் குறிப்பிடப்படவில்லை.

ஒவ்வொரு பகுதி கழகத்திலும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் மாநில, மாநகரக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் பெயர்கள் முன்னிலையில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அமைச்சர் பி.டி.ஆரின் பெயர் மிஸ்ஸிங்.
இது குறித்து கட்சியினர் மத்தியில் பேச்சாக இருக்கிறது. சமூக ஊடகங்களிலும் இதைப் பரப்பிவருகிறார்கள்.
இது குறித்து நாம் மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதியிடம் கேட்டோம், "கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறவர்களைத் தலைமைதான் முடிவுசெய்தது. அமைச்சர் பி.டி.ஆர், `துறைரீதியான பணிகள் இருக்கின்றன, அதனால் தன்னால் கலந்துகொள்ள முடியாது’ என்று தெரிவித்ததால் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. வேறு ஒன்றும் இல்லை" என்றார்.

துறைரீதியான பணிகளால் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர் கலந்துகொள்ளவில்லை என்று மாநகரச் செயலாளரால் சொல்லப்படும் நிலையில், மத்திய தொகுதிக்குள் தி.மு.க அரசின் இரண்டாண்டு சாதனையை அரசு சார்பில் விழா எடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவாக அமைச்சர் பி.டி.ஆர் இன்று நடத்தியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று மதுரை மாநகரக் கழக தி.மு.க-வினர் குழம்பிப்போயிருக்கின்றனர்.