விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் பணிகள் முடிவுற்ற புதிய கட்டடங்கள் திறப்புவிழா, புதிய அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டட அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்டவை நடைபெற்றன. அதன்படி, அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டி கிராமத்தில் புதிய அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரூ.1.2 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கும் புதிய அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்துக்கான பூமி பூஜையை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். புதிதாகக் கட்டப்படவிருக்கும் சுகாதார நிலையத்தில் பிரசவ அறை, பிரசவ வார்டு, மருத்துவ அலுவலர் அறை, ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை, அவசர சிகிச்சை வார்டு, ஆய்வகம், மருந்தகம், தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஆகியவை கட்டப்படவிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ரூ.30.35 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கூடுதல் கட்டடம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.71 விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்துக்கான கூடுதல் கட்டடக் கட்டுமான பணிகளையும் ராஜபாளைய அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் கூடுதல் மருத்துவமனைக் கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகளையும் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

தொடர்ந்து பயனாளிகளுக்குச் சத்துணவு பெட்டகம், சித்தா மருந்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகம், கருத்தடை செய்த பெண்களுக்கான பரிசுப்பொருள், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள், காச நோயாளிகளுக்கான மருந்துப் பெட்டகம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் 18 மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன. இதை அதிகாரிக்கும் பொருட்டு, மேலும் 25 இடங்களில் ரூ.1,038 கோடியில் புதிதாக மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் கட்டப்படவிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.1,600 கோடியில் புதிய மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகளில், புதிய மருத்துவக் கட்டமைப்பு மூலம் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கும் வகையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் இந்த மையங்கள் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்போது ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முடிவடைந்திருக்கின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியில் இரண்டு மையங்களும், விருதுநகர் நகராட்சியில் மூன்று மையங்களும், திருவில்லிபுத்தூரில் ஒரு மையமும், அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒரு மையமும் என மொத்தம் ஏழு நகர்ப்புற நலவாழ்வு மையங்களை ரூ.1.75 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.30.35 கோடி கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளும், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்துவதற்கான புதிய கட்டடம் கட்டும் பணிகளும் இன்று தொடங்கிவைக்கப்படவிருக்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மற்ற மாவட்டங்களிலெல்லாம் மாவட்டத்துக்கு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை ஒன்று என்ற கணக்கிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் விருதுநகர் மாவட்ட மக்களின் தேவையறிந்து தமிழக அரசு விருதுநகர் மாவட்டத்துக்கு ராஜபாளையம், அருப்புக்கோட்டை என இரண்டு இடங்களிலும் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை செயல்பட அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த இரண்டு மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.