தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை வெளியிட்டார். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்தத் தரவரிசைப் பட்டியலில் நாமக்கல்லைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற மாணவி 710 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றார். மேலும் 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டில் 514 மதிப்பெண்களுடன் சிவா என்ற மாணவர் முதலிடம் பெற்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,930 பி.டி.எஸ் படிப்புகளுக்கான இடங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதையடுத்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``7.5 சதவிகித மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டில் 436 இடங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கும், 97 இடங்கள் பி.டி.எஸ் படிப்புகளுக்கும் என மொத்தம் 533 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" எனக் கூறினார். சிறப்பு மற்றும் 7.5 சதவிகித ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு இணையவழி மூலம் வரும் 30-ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை www.tnmedicalselection.org மற்றும் www.tnhealthgov.in ஆகிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
