தமிழ்நாட்டின் அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவை எப்போதும் ஒன்று சேர்ந்தே பயணப்படுவை.
கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, விஜயகாந்த், கமல் ஹாசன், சீமான் உள்ளிட்ட பலரும் சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். ஏன் இன்னும் பலர் இந்த வரிசையில் சினிமாவிலிருந்து அரசியலில் கால் பதிக்கக் காத்திருக்கின்றனர். ஏனெனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமா எப்போதும் வெறும் பொழுதுபோக்கிற்கான களமாக மட்டும் இருந்ததில்லை. பெரும்பாலும் அரசியல் பேசும் களமாகத்தான் இருந்திருக்கிறது, இருக்கப்போகிறது. அரசியல் கருத்துகள், கொள்கைகள் மக்களைச் சென்றடைய சக்தி வாய்ந்த தளமாகவும் இருப்பதும் அதுவே. அரசியல் தலைவராக நினைப்பவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை.

அந்தவகையில் தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினும் தனது இளமைக் காலத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 1984 முதல் 1989 வரை இரண்டு படங்களிலும், ஒரு சீரியலிலும் ஸ்டாலின் நடித்துள்ளார். 1987-ல் கலைஞர் எழுத்தில் இயக்குநர், பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளராக இருந்த கே. சொர்ணம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஒரே ரத்தம்'. இப்படத்தில் ஸ்டாலின் ஒரு தலித் இளைஞனாக திராவிட சித்தாந்தத்தின் வழி நின்று மக்களுக்காகப் போராடும் புரட்சிக்காராக நடித்திருப்பார். இதில் ஸ்டாலினுடன் நடிகர் கார்த்திக் மற்றும் ராதா ரவி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

இதையடுத்து 1988-ல் ராம நாராயணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'மக்கள் ஆணையிட்டால்' திரைப்படம் அரசியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இப்படத்திற்கு கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். இதில் ஸ்டாலின் கெளவர கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே ஸ்டாலின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘குறிஞ்சி மலர்’ எனும் தொடரில் அரவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. குறிப்பாக, இதில் ஸ்டாலின் நடித்திருந்த அரவிந்தன் எனும் கதாப்பத்திரத்தின் பெயரை பல திமுக தொண்டர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் ஸ்டாலினுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. இதையடுத்து தேர்தல் அரசியலில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார் ஸ்டாலின்.