Published:Updated:

நெய்வேலி: ``அரசியலுக்காக வரவில்லை; விவசாயிகள் பாதிக்கப்பட்டால் ஓடோடி வருவேன்!” - அன்புமணி

என்.எல்.சி

``அரசியலுக்காக நான் வரவில்லை. விவசாயிகள் எங்கு பாதிக்கப்பட்டாலும் உங்களுக்காக அங்கு ஓடோடி வருவேன். அது எங்கள் கடமை. தமிழ்நாட்டில் பா.ம.க மட்டும்தான் விவசாயிகளுக்காக இருக்கும் கட்சி. ஏனென்றால் எங்கள் தலைவர் விவசாயி.” - என்.எல்.சி கருத்து கேட்பு கூட்டத்தில் அன்புமணி.

Published:Updated:

நெய்வேலி: ``அரசியலுக்காக வரவில்லை; விவசாயிகள் பாதிக்கப்பட்டால் ஓடோடி வருவேன்!” - அன்புமணி

``அரசியலுக்காக நான் வரவில்லை. விவசாயிகள் எங்கு பாதிக்கப்பட்டாலும் உங்களுக்காக அங்கு ஓடோடி வருவேன். அது எங்கள் கடமை. தமிழ்நாட்டில் பா.ம.க மட்டும்தான் விவசாயிகளுக்காக இருக்கும் கட்சி. ஏனென்றால் எங்கள் தலைவர் விவசாயி.” - என்.எல்.சி கருத்து கேட்பு கூட்டத்தில் அன்புமணி.

என்.எல்.சி

நெய்வேலி அனல்மின் நிலையத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது என்.எல்.சி நிர்வாகம். அதற்கு அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், பா.ம.க சார்பில் அந்த மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சிறுவரப்பூர் கிராமத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பின்பு பேசிய எம்.பி அன்புமணி ராமதாஸ், “பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து இந்த மண்ணில் நீங்கள் வாழ்ந்துவருகிறீர்கள். இந்த மண்ணைத் தவிர உங்களிடம் வேறு எதுவும் கிடையாது.

இந்த மண்ணைத்தான் பிடுங்கி எடுப்போம் என்று கங்கணம் கட்டியிருக்கிறது என்.எல்.சி நிறுவனம். பா.ம.க என்றுமே வளர்ச்சிக்கு எதிரான கட்சி கிடையாது. நமக்கு வளர்ச்சி தேவைதான். நம் பிள்ளைகள் படிக்க வேண்டும். படித்த பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். ஆனால் உங்களது வாழ்வாதாரத்தைப் பிடுங்கி, விவசாய நிலத்தைப் பிடுங்கி வளர்ச்சி என்ற பெயரில் என்.எல்.சி நிறுவனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. நிச்சயமாக உங்களுக்குப் பாதுகாவலராக நிற்கிறார் நம் இனமான காவலர், சமூகநீதிப் போராளி மருத்துவர் ராமதாஸ். அவருடைய கட்டளைப்படிதான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

மக்களிடம் கருத்து கேட்கும் அன்புமணி ராமதாஸ்
மக்களிடம் கருத்து கேட்கும் அன்புமணி ராமதாஸ்

ஒருபிடி மண்ணைக்கூட உங்களின் அனுமதி இல்லாமல் எடுக்க விட மாட்டேன் இந்த அன்புமணி ராமதாஸ். இன்னும் சொல்லப்போனால் என்.எல்.சி நிர்வாகம் என்றைக்கு இந்த மாவட்டத்தில் நுழைந்ததோ அன்றைக்கே இந்த மாவட்டம் சீரழியத் தொடங்கிவிட்டது. அப்போது 44 கிராமங்களில் முப்போகம் விளைந்துகொண்டிருந்த 37,000 ஏக்கர் நிலத்தைப் பிடுங்கி எடுத்துவிட்டார்கள். அந்த கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருந்த 40,000 மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்தார்கள். அப்படி மனசாட்சி இல்லாமல் அவ்வளவு மக்களை அப்புறப்படுத்தியது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் தன்னூற்று என்று சொல்லக்கூடிய நீர் தானாக ஊற்றெடுக்கும். அப்போது கடலூர் மாவட்டம் முழுவதுமே வெறும் 5 முதல் 8 அடி ஆழத்தில் கிடைத்துவந்த தண்ணீர் இப்போது 800 முதல் 1,200 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டது. இதுதான் வளர்ச்சியா... இதையா நாங்கள் கேட்டோம் ?

8 அடியில் இருந்த தண்ணீர் 800 அடிக்கு கீழே போனதற்குக் காரணம் இந்த பாழாய்ப்போன என்.எல்.சி நிறுவனம்தான். அவர்கள் பாழாய்ப் போகவில்லை. கொழுத்துப்போயிருக்கிறார்கள். நீங்கள்தான் பாழாய்ப்போய்விட்டீர்கள். 1956-ல் ஒருசில லட்சங்களில் முதலீடு செய்த என்.எல்.சி நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு ரூ.54,000 கோடி. போன வருடத்தின் லாபம் மட்டுமே ரூ.11,500 கோடி. அவ்வளவு லாபம் ஈட்டக்கூடிய ஒரு நிறுவனம் இந்த மாவட்டத்துக்கும் மக்களுக்கும் என்ன செய்தது? ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று 2008-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்.எல்.சி நிர்வாகம். இவர்களுக்கு உண்மையாகவே இந்த மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் அன்றைக்கே கொடுத்திருக்கலாமே? அதன் பிறகு ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி)
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி)

அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகின்றன. இன்னும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 1956-ல் என்.எல்.சி-க்கு தங்களின் நிலங்களைக் கொடுத்த 44 கிராம மக்களுக்கு இன்னும் இவர்கள் வேலை கொடுக்கவில்லை. அதில் வெறும் 1,800 பேருக்கு மட்டும் வேலை கொடுத்தார்கள். இன்று சுமார் 14,500 பேர் ஒப்பந்தப் பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்களில் 3,200 பேர் நிலம் கொடுத்தவர்கள். அதிலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் என்றால் இவர்களுக்கு வெறும் ரூ.12,000 – 15,000/- மட்டும்தான். ஆனால் நிரந்தரத் தொழிலாளர்களைவிட அதிகமாக வேலை செய்வது ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். இந்தப் பகுதி மக்களை ஒப்பந்தப் பணியாளர்களாக வைத்துக்கொண்டு, நிரந்தரப் பணியாளர்களை ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்திலிருந்து அழைத்து வருகிறார்கள். இனி நாங்கள் ஏமாறப்போவதில்லை. அரசியலுக்காக இங்கு நான் வரவில்லை. விவசாயிகள் எங்கு பாதிக்கப்பட்டாலும் உங்களுக்காக அங்கு ஓடோடி வருவேன்.

தமிழ்நாட்டில் எங்கு விவசாயம் பாதிக்கப்பட்டாலும் மிகப்பெரிய போராட்டம் செய்து அதைப் பாதுகாப்போம். அது எங்கள் கடமை. தமிழ்நாட்டில் பா.ம.க மட்டும்தான் விவசாயிகளுக்காக இருக்கும் கட்சி. ஏனென்றால் எங்கள் தலைவர் ஒரு விவசாயி. காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்ற யோசனையை நாம்தான் முன்வைத்தோம். விவசாயத்தைத் தவிர அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. எவ்வளவு பெரிய சாதனை இது. பா.ம.க செய்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு அது புரியவில்லை. தேர்தல் நேரங்களில் 500, 1,000, 2,000 அவ்வளவுதான். அன்றோடு தி.மு.க-வும் சரி அ.தி.மு.க-வும் சரி பார்க்க மாட்டார்கள். ஐந்து வருடங்களுக்குப் பிறகு அடுத்த தேர்தலுக்கு வந்து 500, 1,000 கொடுத்து ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு இடைப்பட்ட காலங்களில் உங்களுடன் இருப்பது பா.ம.க மட்டும்தான்.

கருத்து கேட்பு கூட்டம்
கருத்து கேட்பு கூட்டம்

இந்த மாவட்டத்தில் இரண்டு மந்திரிகள் இருக்கிறார்கள். ஒருவரை `வேங்கையின் மைந்தன்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். அவர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்.எல்.சி நிலம் எடுக்கக் கூடாது என்று போராட்டம் செய்தார். அவரே இப்போது ஆளுங்கட்சியில் அமைச்சராக இருக்கும்போது ‘என்.எல்.சி-காரன் காசு கொடுக்கிறான், வாங்கிக்கங்க. 23 லட்சம் ரூபாய் பெரிய பணம்’ என்று சொல்கிறார். `நிலத்தை எடுங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று போலீஸிடம் வேறு கூறுகிறார். போலீஸ் அல்ல, ராணுவமே வந்தாலும் நாங்கள் விடப்போவதில்லை. அது எந்த மைந்தன் வந்தாலும் சரி... இவர்களைத்தான் நீங்கள் இவ்வளவு காலமாக நம்பியிருக்கிறீர்கள். ஆட்சியில் இல்லாதபோது ஒன்று பேசுவதும், ஆட்சிக்கு வந்ததும் வேறு மாதிரிப் பேசுவதும்… அது என்ன வாய்.. அது வேற வாய்... இவ்வளவு பெரிய மேடையில் எனக்கு ஒரு வருத்தம். நம் காடு வெட்டியார் நம்முடன் இல்லை. அவர் இருந்திருந்தால் என்.எல்.சி-காரன் இந்த அறிவிப்பைக்கூட அறிவிக்க மாட்டான்.

இது வெறும் கருத்துக்கேட்பு கூட்டம்தான். இதன் பிறகுதான் பலகட்ட போராட்டங்கள் என் தலைமையில் நடக்கப்போகின்றன. தண்ணீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்பும் என்.எல்.சி., மழைக்காலங்களில் அந்தத் தண்ணீரை விவசாய நிலங்களுக்குத் திருப்பிவிடுகிறது. இவர்களால் இந்த மாவட்டத்துக்கும் மக்களுக்கும் எந்தப் பயனும் கிடையாது. என்.எல்.சி-யில் இரண்டு அனல்மின் நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் 2,998 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இந்த இரண்டு அனல்மின் நிலையங்களுக்கும் அன்றாடம் சிறிது நிலக்கரி எடுத்தால் போதும். ஆனால் ஆந்திராவிலிருந்து மகாலட்சுமி என்ற ஒரு நிறுவனத்தை அழைத்து வந்திருக்கிறார்கள்.

அந்த நிறுவனம் பெரிய பெரிய இயந்திரங்களை வைத்துக்கொண்டு தோராயமாக ஒரு நாளுக்கு 100 டன் நிலக்கரி எடுத்தால் போதுமானது என்றால், அவர்கள் 1,000 டன் எடுக்கிறார்கள். அனல்மின் நிலையத் தேவைக்கு 100 டன் போக மீதமிருக்கும் 900 டன் நிலக்கரியை வெளியில் விற்கிறார்கள். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுங்கட்சி மந்திரிகள் வேண்டுமானால் இவர்களுக்கு ஜால்ரா அடிக்கலாம். ஆனால் நாங்கள் விடப்போவது கிடையாது. இங்கு வரும் லாபத்தில் ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்துவிட்டு தமிழ்நாட்டில் நாமத்தைப் போடுகிறது என்.எல்.சி. அதனால் இனி நாங்கள் பொறுக்கப்போவது கிடையாது” என்றார்.