இந்திய ரயில்வேக்குச் சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிகப் பயன்பாட்டுக்காக ரயில் நில மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயிலுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்.

`இது எம்.எஸ்.தோனி ஆடிய இடம்; பி.டி.உஷா ஓடிய தடம்... ரயில்வே மைதானங்களைத் தனியாருக்கு விற்காதே!' என்கிற தலைப்பில் அவர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், ``இந்திய ரயில்வேயின் 15 விளையாட்டு மைதானங்களை வணிகப் பயன்பாட்டுக்காக `ரயில் நில மேம்பாட்டு ஆணையத்திடம்' ஒப்படைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் பொருள் தனியாருக்கு விற்பதுதான். இந்தப் பட்டியலில் சென்னை ஐ.சி.எஃப் விளையாட்டு வளாகமும் உண்டு.
ரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் சேவை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர்நோக்கியுள்ள சூழலில், ரயில்வே மைதானங்களைத் தனியாருக்கு விற்பது என முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது மக்களுக்கும் தேசத்துக்கும் விரோதமான செயல்.
இந்திய ரயில்வேயின் கீழ் விளையாட்டு வளர்ச்சி ஆணையம் ஒன்று இயங்குகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் பதக்கங்களைப் பெற்றவர்கள். அவர்கள் அனைவருமே கீழ்மட்டப் பணிகளிலிருந்து மேலே வந்தவர்கள். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியும், தங்கக் கால்களுக்குச் சொந்தக்காரரான பி.டி.உஷாவும் பயணச்சீட்டுப் பரிசோதகர்களாக இருந்தவர்கள். இவர்களைப் போன்ற பலரும் ரயில்வே மைதானங்களின் வளங்களையும் வசதிகளையும் பயன்படுத்தியே உயரங்களுக்குச் சென்றிருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ``இந்தியா இதுவரை பெற்றிருக்கும் 21 ஒலிம்பிக் பதக்கங்களில், 13 பதக்கங்களை ரயில்வே ஊழியர்கள்தாம் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அர்ஜுனா விருது பெற்ற ரயில்வே ஊழியர்களும் அதிகம். பி.டி.உஷா (தடகளம்) சுஷில் குமார் (மல்யுத்தம்), வெள்ளைச்சாமி (பளு தூக்கல்), ராஜரத்தினம் (கபாடி), பாஸ்கரன் (ஹாக்கி), தமிழ்ச்செல்வன் (உடற்கட்டு), ஜெகந்நாதன் (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்ட ரயில்வே பணியாளர்கள் அர்ஜுனா விருது வென்றவர்கள்.
இவர்கள் அனைவருமே சாமானியர்கள். இவர்களுக்குக் கட்டணமில்லா பயிற்சிகள் ரயில்வே மைதானங்கள் மூலமே கிடைத்தன. சமூகத்தில் அடித்தள ஆற்றல்களை அடையாளம் காணவும், பயன்படுத்தவும், வளர்க்கவும் இது போன்ற அரசுக் கட்டமைப்புகள் தேவை. அப்போதுதான் உலக அளவிலும், தேசிய அளவிலும் கொண்டாடத்தக்க பலர் கிடைப்பார்கள்.
இது வெறும் பணம் பண்ணுகிற செயல் அல்ல. தேசத்தின் பெருமையைப் பறைசாற்றுகிற ஆற்றல்மிக்க அடித்தள வீரர்களுக்கு வழியை அடைக்கிற அபாய முடிவாகும். விளையாட்டுத்துறையின் விரிவான ஈர்ப்பைச் சிதைக்கிற செயல் ஆகும். ஆகவே இத்தகைய தவறான முடிவை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும்.
விளையாட்டை விபரீதமாக மாற்றாதீர்கள்!
அமைச்சரே தோனிகள் ஆடட்டும்; உஷாக்கள் ஓடட்டும்!” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சு.வெங்கடேசன்.