வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இந்தியப் பொருளாதாரமும் சமூகமும் இன்று எதிர்கொள்ளும் மிக பெரிய பிரச்சினைகள் என்பவை எங்கும் நிறைந்த ஊழல் மற்றும் குரோனி கேபிடசலிசம் எனப்படும் முதலாளித்துவ பொருளாதாரம் இரண்டுமே.
மிக பெரும் வணிக சாம்ராஜ்யங்கள் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட பல மிக பெரிய ஊழல்களை கடந்த காலத்தில் இருந்து சமீப காலம் வரை நாம் நிறையவே பார்த்து இருக்கிறோம்.
குரோனி கேபிடசலிசம் (Crony capitalism) என்பது அதிகாரத்தின் முறைகேடான பயன்பாடு அல்லது அதிகார துஷ்பிரயோகத்தை விவரிக்க பயன்படுத்தப்படும் சொல். பெரும் வணிக சாம்ராஜ்யங்களின் முதலாளிகள் தங்களுக்கு அரசியல் கட்சிகளுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு முறைகேடான வணிக நடவடிக்கைகளை அரசின் ஆதரவுடன் நடத்துவதே குரோனி கேபிடசலிசம் அல்லது முதலாளித்துவ பொருளாதாரம் என்பதன் அர்த்தமாகும்.

இந்தியாவில் குரோனி கேபிடசலிசத்தின் விதைகள் காலனி ஆட்சிக்கு முந்தைய காலத்தில் போடப்பட்டவை. 1600களில் கிழக்கிந்திய கம்பனிக்கு வழங்கப்பட்ட வணிகத்துக்கான மானியம் இந்தியாவில் குரோனி கேபிடசலிசம் வேர் பிடித்து வளர ஆரம்பிக்க உதவியது. கிழக்கிந்திய கம்பனியின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான வணிகத்துக்கு உதவிய இந்தியாவின் சமஸ்தான அரசர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செல்வத்தை வாரி குவித்தனர். அப்படி ஆரம்பித்த குரோனி கேபிடசலிசம் சுதந்திரத்துக்கு பிறகு ஆழமாக வேர் பிடித்து வளர ஆரம்பித்தது.
சுதந்திரத்துக்கு பிறகு அரசாங்கத்தால் வெகுவாக முன்னெடுக்கப்பட சோஷலிச சிந்தாந்தம் வர்த்தக நிறுவனங்கள் அரசின் மீது முழுமையாக சார்ந்து இருக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. பெரும்பாலான முடிவுகள் அரசின் அதிகார வர்க்கத்தின் தலைமையகமான டெல்லியை மையப்படுத்தியே இருந்தன. இதனால் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய டெல்லி அதிகார வர்க்கத்துடனான தொடர்புகளை உருவாக்கி பலப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிப்போனது.

மிக பெரு வணிக முதலாளிகளுக்கு அவர்களின் வர்த்தக வளர்ச்சிக்கான அனைத்து வகையான தொழில் முறை உதவிகளையும், மிக பெரும் வணிக ஒப்பந்தங்களையும் முறைகேடாக பெற அவர்களுடைய அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகளுடனான தொடர்புகள் ஒரு "மாஸ்டர் கீ" போல உதவுகிறது. இப்படி தகுதியற்ற வணிக நிறுவனங்களுக்கு மிக பெரும் வணிக ஒப்பந்தங்களை தருவது, ஏலத்தில் முறைகேடு செய்வது போன்ற குரோனி கேபிடசலிச நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்திற்கு சொல்லொணாத் தீங்கை இழைத்துள்ளன.
சமீபத்தில் நாம் பார்த்த அதானி குழுமம் போல தகுதியும் அனுபவமும் அற்ற குரோனி கேபிடலிச முதலாளிகள் மிக தகுதியான பிற நிறுவனங்களை வஞ்சித்து அரசின் முக்கிய உள்கட்டமைப்பு (விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி) சம்பந்தப்பட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்களை தகுதியே இல்லாமல் பெற்று கோடிகளை குவித்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் இப்படி குரோனி கேபிடலிச முதலாளிகள் வென்ற பல பெரும் ஒப்பந்தங்கள், ஒப்பந்தத்தில் சொன்னபடி வேலையை சொன்ன நேரத்திற்குள் முடிக்காமல் இழுத்தடித்து அரசுக்கு மேலும் செலவீனங்களை கூட்டி அதன் மூலம் இன்னும் லட்சக்கணக்கான கோடிகளை குவித்து வருகின்றனர்.

இந்த குரோனி கேபிடலிச முதலாளிகளால் நாடு சந்திக்கும் பெரும் பிரச்சினைகள் என்ன ?
1) அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு மிக பெரும் செல்வாக்கு படைத்தவர்களாக உருவெடுத்து உள்ளனர் இந்த குரோனி கேபிடலிச முதலாளிகள். வியாபாரம், பொருளாதாரம், கனிம வளம் போன்ற முக்கிய விஷயங்களில் இந்த குரோனி கேபிடலிச முதலாளிகளின் இசைவின்றி எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்ற நிலைக்கு இந்திய அரசியல் தள்ளப்பட்டு இருக்கிறது. ஒரு வகையில் சொல்லப்போனால் அரசின் வருடாந்திர பட்ஜெட்டையும் அதன் முக்கிய அம்சங்களையும் தீர்மானிப்பதே இந்த குரோனி கேபிடலிச முதலாளிகள்தான்.
2) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த குரோனி கேபிடலிச முதலாளிகள் வாங்கும் லட்சக்கணக்கான கோடி கடன்களை இவர்கள் திரும்ப செலுத்துவதே இல்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் இந்திய வங்கித்துறை சந்திக்கும் நஷ்டம் பல லட்சம் கோடிகளாகும்.
3) செய்யும் தொழிலுக்கு முறையாக அரசுக்கு செலுத்தவேண்டிய வருமான வரியை கட்டாமல் ஏமாற்றி இந்தியாவுக்கு வெளியில் இவர்கள் வைத்து இருக்கும் டுபாக்கூர் ஷெல் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிகளை மடைமாற்றி பதுக்கி வைத்து இந்திய பொருளாதாரத்துக்கு மிக பெரும் நஷ்டத்தை இந்த குரோனி கேபிடலிச முதலாளிகள் ஏற்படுத்துகின்றனர். அந்த பணத்தை இந்திய பங்குசந்தையில் மறுமுதலீடு செய்து சமீபத்தில் வெளியாகிய ஹிண்டன்பெர்க் அறிக்கை சொல்வதுபோல பங்குசந்தையில் மிக பெரும் ஊழல்களை நடத்துகின்றனர்.

4) கட்சிகளுக்கு தேர்தல் நிதிகளை பெருமளவில் அள்ளிக்கொடுப்பதன் மூலம் குதிரை பேரம் மூலம் நன்றாக நடக்கும் ஒரு ஆட்சியை கவிழ்க்கவும், மக்கள் ஆதரவற்ற அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுத்து, தேர்தலில் போட்டியிட்டும், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும் ஆட்சியை பிடிக்க இந்த குரோனி கேபிடலிச முதலாளிகள் நேரடியாகவே உதவுகின்றனர். சமீபத்தில் தாங்கள் கொடுக்கும் நிதியின் அளவை வெளியுலகம் கண்டுபிடிக்காமல் இருக்க வங்கிகள் மூலம் பணமாக்கி கொள்ள கூடிய எலெக்டோரல் பாண்ட் (Electoral Bonds) எனப்படும் தேர்தல் நிதி பத்திரங்களை இந்த இந்த குரோனி கேபிடலிச முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
5) இப்படி அரசியல்வாதிகளையும் , அதிகாரவர்கத்தையும் தங்கள் கைப்பிடியில் வைத்து இருப்பதன் மூலம் அரசின் ஒவ்வொரு நகர்வுகளையும் தீர்மானிக்கும் இந்த குரோனி கேபிடலிச முதலாளிகள் வெளிநாடுகள் நம் நாட்டின் மீது தொடுக்க நினைக்கும் வர்த்தக, பொருளாதார போர்கள் போன்றவற்றில் எளிதில் விலைபோகும் அபாயம் இருக்கிறது.

இப்படி கட்டற்ற சுதந்திரங்களை பெற்று அரசின் தொழில் துறையில் இந்த குரோனி கேபிடலிச முதலாளிகள் நடத்தி வந்த தொழில் சாம்ராஜ்யம் " லைசென்ஸ் ராஜ் (License Raj) "என்றழைக்கப்பட்டது .
24 ஜூலை 1991 அன்று, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தாராளமயமாக்கலுக்கு வழிவகுத்த புரட்சிகரமான தன்னுடைய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து இந்த லைசென்ஸ் ராஜ் முற்றிலுமாக முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். அப்போது நிதி மந்திரியாக இருந்த முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள் கொண்டுவந்த ஏராளமான பொருளாதார சீர்த்திருத்தங்கள் உலகமயமாக்கலுக்கு வழி வகுத்தாலும் இந்தியாவில் ஆலமரம் போல வேரோடிப்போயிருக்கும் குரோனி கேபிடசலிசம் எனப்படும் முதலாளித்துவ பொருளாதாரத்தை முற்றிலுமாக வேரறுக்க முடியவில்லை. அதற்கு பின் வந்த அரசுகளிலும் இதுவரையிலும் இந்த குரோனி கேபிடசலிச முதலாளிகளின் ஆதிக்கம் பெருமளவில் இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.