கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன் (83) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``என்னுடைய பெற்றோர் ஆர்.ஜெயராம், ஜெ.ஜெயம்மா. இவர்களுக்கு நான் ஒரே வாரிசு. என் தந்தை வேதவல்லி என்ற வேதம்மாவை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர். இந்த வகையில், ஜெயக்குமாரும் ஜெயலலிதாவும் என்னுடைய சகோதர, சகோதரியாவார்கள்.
1950-ம் ஆண்டில் என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் என் அம்மா வழக்கு தொடர்ந்தார். அப்போது வேதவல்லி அவரின் வாரிசுகள் ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோரை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்தார். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு, ஜெயக்குமார் இறந்துவிட்டார். அதனால், இன்றைய தினத்தில் சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான் மட்டுமே. எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவிகிதம் எனக்கு வர வேண்டும்.

தீபா, தீபக்தான் சட்டப்படி வாரிசு என்று அறிவித்து 2020-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ``இந்த வழக்கு தொடர்பாக தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.