இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பலர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். முன்னதாக இதை அரசியலாக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்த வீராங்கனைகள், மீண்டும் அனைத்துக் கட்சிகளையும் போராட்டத்துக்கு வரவேற்கிறோம் எனக் கூறிய பிறகு பல அரசியல் தலைவர்களும் வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டில் பா.ஜ.க எம்.பி-மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வியெழுப்பி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ``இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் இறங்கிப் போராடிவருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
விசாரணைக்குழு அறிக்கை வெளியான பிறகும், பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கும் டெல்லி காவல்துறையின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. நாட்டுக்காக விளையாடி, புகழை ஈட்டித் தந்த மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கும் பா.ஜ.க எம்.பி சரண்சிங் மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் துணிவின்றி, போராடும் மல்யுத்த வீராங்கனைகளால் நாட்டுக்குத் தலைக்குனிவு ஏற்படுவதாக, இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவர் பி.டி.உஷா கூறுவது வெட்கக்கேடானது.

இதன் மூலம் பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கவே பா.ஜ.க விரும்புகிறது என்பது உறுதிப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவரும் நிலையில், காஷ்மீர் மண்ணின் மகள் ஆசிஃபா முதல் தற்போது மல்யுத்த வீராங்கனைகள் வரை ஒவ்வொரு முறையும் பா.ஜ.க-வினர்மீது பாலியல் குற்றச்சாட்டு எழும்போதும் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாக்க ஆட்சி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை பா.ஜ.க வழக்கமாகக்கொண்டிருக்கிறது.

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதுதான் பா.ஜ.க-வின் பண்பாடா... நாட்டுக்காக விளையாடிய வீராங்கனைகளை நீதி கேட்டு வீதியில் இறங்கிப் போராடவைத்திருப்பதுதான் பா.ஜ.க கூறும் தேசபக்தியா... ஆகவே, பண்பாடு, கலாசாரம், தேசபக்தி என்று பா.ஜ.க மற்றவர்களுக்குப் பாடமெடுப்பதை விடுத்து, பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது விரைந்து சட்ட நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.