Published:Updated:

காங்கிரஸின் `மேக்கேதாட்டூ' வாக்குறுதி; ``தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சி!" - சீமான் கண்டனம்!

சீமான் ( கோப்புப் படம் )

``காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சி." - சீமான்

Published:Updated:

காங்கிரஸின் `மேக்கேதாட்டூ' வாக்குறுதி; ``தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சி!" - சீமான் கண்டனம்!

``காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சி." - சீமான்

சீமான் ( கோப்புப் படம் )

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாள்களே இருக்கின்றன. அதனால், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அண்மையில், பா.ஜ.க-வைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. அதில், மேக்கேதாட்டூ அணை கட்டுவது தொடர்பான வாக்குறுதியும் மிக முக்கியமான ஒன்று. காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் களத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், `கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேக்கேதாட்டூ அணை கட்ட வாக்குறுதி அளித்திருப்பது, தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம்' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

கர்நாடகத் தேர்தல்
கர்நாடகத் தேர்தல்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்டும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சி. கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆண்ட காங்கிரஸ் – பா.ஜ.க என இரு கட்சிகளும், ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி, காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி கடந்த 50 ஆண்டுக்காலமாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளைப் புரிந்தன.

கடந்த ஐந்து ஆண்டுக்காலமாக கர்நாடக மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க, மேக்கேதாட்டூ அணை கட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து, தமிழர்களுக்கு எதிரான அதே துரோக வரலாற்றைத் தொடர்ந்தது. அதன் அடுத்தகட்டமாக, தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு முன்பாகவே மேக்கேதாட்டூ அணை கட்ட ரூ.9,000 கோடியை ஒதுக்குவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்திருக்கிறது. இந்தியக் கட்சிகள் எப்போதும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிராகவே செயல்படும் என்பதையே மீண்டும் ஒருமுறை நிறுவுகின்றன.

திமுக - ஸ்டாலின்
திமுக - ஸ்டாலின்

மேக்கேதாட்டூ அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அணை கட்ட நிதி ஒதுக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி, இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல். இந்திய கட்சிகளின் இத்தகைய ஒரு பக்கச் சார்பான நடவடிக்கைகள், நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லர் என்ற உணர்வை ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் வெடித்தெழவே வழிவகுக்கும்.

இதுதான் இந்தியாவின் ஒற்றுமையை காங்கிரஸ் கட்சி கட்டிக் காப்பாற்றுகின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கையா... இவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேச ராகுல் காந்திக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. அதுமட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யத் தேர்தல் பணிக்குழு அமைத்துப் பாடுபட வேண்டும் என்று கர்நாடக மாநில தி.மு.க-வினருக்கு அறிவுறுத்தி தி.மு.க தலைமை சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சீமான்
சீமான்

மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தி.மு.க-வுக்குத் தெரியுமா... தெரியாதா... ஆதரவு தெரிவிப்பதற்கு முன் மேக்கேதாட்டூ அணையைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது என்ற உறுதிமொழியை காங்கிரஸ் கட்சியிடம் தி.மு.க ஏன் பெறவில்லை... காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவதன் மூலம் காவிரியில் மேக்கேதாட்டூ அணையைக் கட்ட தி.மு.க மறைமுக ஆதரவு அளிப்பது தமிழ்நாட்டுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம்.

ஆகவே, மேக்கேதாட்டூ அணை கட்ட ரூ.9,000 கோடியை ஒதுக்கும் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். அவ்வாறு திரும்பப் பெறவில்லை எனில் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் முடிவை தி.மு.க கைவிடவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.