அ.தி.மு.க-வில் நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்த ஒற்றைத் தலைமை விவாதம் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாகச் சொல்லி, அந்தக் கடிதத்தை வாசித்தார். அந்தக் கடிதத்தில், `` 23.6.2022 அன்று நடைபெறவிருக்கும் கழகப் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க அதிமுக-வின் தலைமையகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் 14.6.2002 அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறவிறுக்கும் மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலைத் தாங்கள் தெரிவித்தீர்கள். கூட்டம் அழைக்கப்பட்டு, அதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

பொதுவாக கழக அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர்கள் முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காகத் தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரைச் சிறப்பு அழைப்பாளர்களாகப் பொதுக்குழுவுக்கு அழைப்பது நமது கழகத்தால் ஆண்டாண்டுக்காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறை வரும் பொதுக்குழுவில் பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் எங்களைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து சிறப்பு அழைப்பாளர்களாகத் தங்களையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதே மண்டபத்தில் பலமுறை கழகத்தின் பொதுக்குழுவை நடத்தியபோதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். இப்போது அதே மண்டபத்தில் இடம் இல்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று தங்களது ஆதங்கத்தைத் தெரியப்படுத்துகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து 14.6.2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கழக சட்ட விதிகளை உணராமலும் அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய கருத்தால் கழகத் தொண்டர்கள் கொதித்துப்போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், கழகத் தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அத்தகைய கருத்தால் கட்சியில் குழப்பமும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம்.
இதன் காரணமாக ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழுவைத் தள்ளிவைக்க வேண்டும். அடுத்த கூட்டத்துக்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம்'' என எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்திலிங்கம் தெரிவித்தார், இந்தக் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வமும் வைத்திலிங்கமும் கையெழுத்திட்டுள்ளனர். இதற்கிடையே, திட்டமிட்டப்படி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி தரப்பில் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சிலர் கூட்டம் நடைபெறும் மண்டபத்தை ஆய்வு செய்தும் வருகிறார்கள். இதற்கிடையே, பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கோரிய மனு மீதான விசாரணையும் இன்று மதியம் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது.