சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை - மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியைக் காணச் சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சந்தித்துப் பேசினர். இவர்கள் பேசிக்கொள்ளும் புகைப்படம், வீடியோ அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார்.

அதில், "கலியுகத்தில் யதார்த்தமாக உண்மையாக நடந்துகொள்பவர்கள், நியாயமான கருத்துகளைத் தெரிவிப்பவர்களை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் இல்லாததால் விமர்சனங்களை முன்வைத்து விரோதியாகப் பார்ப்பார்கள். காலச்சக்கர சுழற்சியில் மாய வலைகள் அறுக்கப்பட்ட பிறகு உண்மைத்தன்மை புரியவரும்; அப்போது விமர்சனம் செய்தவர்கள் கடந்த கால செயல்களை அறிந்து வருத்தப்படுவார்கள்.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க கழக ஒருங்கிணைப்பாளர் சென்றிருக்கிறார்; அதே பாக்ஸில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் மருமகன் சபரிசன் அவர்கள், "நான் அ.இ.அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரை நேரில் பார்த்ததில்லை; அவரைப் பார்த்துப் பேச வேண்டும்" என்று தனது விருப்பத்தை உதவியாளர் மூலம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு கழக ஒருங்கிணைப்பாளரும் சபரீசனும் அனைவரது முன்னிலையில் கைகொடுத்து மரியாதை நிமித்தமாக ஐந்து நிமிடம் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வு குறித்து கட்சியில் ஒரு சில சுயநலக் கூட்டத்தின் தூண்டுதலால் கழக ஒருங்கிணைப்பாளர் தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று விஷமத்தனமான விமர்சனங்களை உருவாக்கி வருகிறார்கள். அதைப்போல, தி.மு.க கட்சியில் சபரீசன் அவர்களை எதிர்த்து, "அவர் அ.இ.அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரை ஏன் சந்தித்தார்" என்று ஏதேனும் விமர்சனம் வருகிறதா... அது ஏன் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது கழகத்தில் ஒரு சுயநலக் கூட்டம் நமது கட்சியை அபகரிப்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் யாரெல்லாம் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் இது போன்ற விஷத்தன்மையான கருத்துகளைக் கட்சிக்குள் செலுத்தி, ஒருசில தொண்டர்களை விஷமாக்கி வைத்திருக்கிறார்கள். தி.மு.க கட்சித் தலைவர்களைக் கழக ஒருங்கிணைப்பாளர் பார்த்தார், சிரித்தார், பேசினார் என்று உப்பு சப்பு இல்லாத காரணங்களைப் பேசி பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி ஒரு சில தொண்டர்களை ஏமாற்றியும் தமிழக மக்களை குழப்பியும் வருகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர் 46 ஆண்டுக்காலம் நமது கட்சியின் விசுவாசம் மிக்க உண்மைத் தொண்டனாக இருந்தார் என்று புரட்சித்தலைவியால் புகழப் பெற்று தமிழக மக்களால் உண்மையானவர் என்று பெயர் வாங்கியவர். தான் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்காகக் கடந்து வந்த பாதைகளில் எவ்வளவு முள்களையும் கற்களையும் கடந்து, வலிகளைச் சுமந்து கட்சியை வளர்த்திருக்கிறார் என்று மனசாட்சியின்படி சுய அறிவோடு சிந்தித்துப் பார்த்து, விமர்சனங்களை முன் வையுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.