`பிரதமரின் முழு ஒத்துழைப்புடன் இயற்றப்பட்ட ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்' என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்ப் பண்பாட்டுக்கு, தமிழ் கலாசாரத்துக்கு கிடைத்த வெற்றி.

பொங்கல் திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி காலங்காலமாக நடத்தப்பட்டுவந்த நிலையில், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு 2011-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடைவிதித்து ஓர் அறிவிக்கையை வெளியிட்டது.
இருப்பினும், 2009-ம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தின் அடிப்படையில், ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டுவந்த நிலையில், 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு ரத்துசெய்து தீர்ப்பளித்தது. இதன் விளைவாக ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழ்நாட்டில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இருப்பினும், ஜெயலலிதா தொடர் வற்புறுத்தல் காரணமாக, ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த ஏதுவாக 07-01-2016-ம் ஆண்டு மத்திய அரசு ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையையும் உச்ச நீதிமன்றம் 12-01-2016 அன்று தடைசெய்து தீர்ப்பளித்தது. தி.மு.க அரசு அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக மிகப் பெரிய அளவில் போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றதையடுத்து, பிரதமரின் முழு ஒத்துழைப்புடன், அ.தி.மு.க-வின் ஆட்சிக் காலத்தில் துரிதமான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கான சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டின் கலாசார மரபுரிமையை நிலைநாட்டிய பெருமை அ.தி.மு.க-வுக்கு உண்டு. இதற்கான சட்டமுன்வடிவை, முதலமைச்சர் என்ற முறையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நான் முன்மொழிந்ததையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டம் நான் முதலமைச்சராக இருந்தபோது இயற்றப்பட்டதையும் என்னுடைய வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.
இன்றளவிலும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன என்றால், அதற்குக் காரணம் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம்தான். இந்தச் சட்டத்தையும் எதிர்த்து, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக இந்த வழக்கில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தன்னை இணைத்துக்கொண்டு, வழக்கறிஞர் மூலம் வலுவான வாதங்களை வைத்து வாதாடினார். இதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியிருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்பதும், தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்றும், தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்றும் தெரிவித்து, என்னால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று கூறியிருக்கிறது.

இதை அ.தி.மு.க-வின் சார்பில் வரவேற்கிறேன். இந்தத் தருணத்தில், 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமுன்வடிவை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் முன்மொழியும் வாய்ப்பை வழங்கிய ஜெயலலிதாவுக்கும், இந்தச் சட்டம் நிறைவேற முழு ஒத்துழைப்பு அளித்த பிரதமர் மோடிக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் கிடைத்த வெற்றி. இதை நான் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.