Published:Updated:

உட்கட்சிப்பூசல்: "வன்முறையும், திமுக-வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது" - ஓபிஎஸ் விமர்சனம்

ஓ.பி.எஸ்.

"அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும் மோதிக்கொள்வது என்பதும், ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதும், வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்." - ஓ.பன்னீர்செல்வம்

Published:Updated:

உட்கட்சிப்பூசல்: "வன்முறையும், திமுக-வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது" - ஓபிஎஸ் விமர்சனம்

"அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும் மோதிக்கொள்வது என்பதும், ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதும், வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்." - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ்.

தி.மு.க-வைச் சேர்ந்த கே.என்.நேரு, திருச்சி சிவா-வின் ஆதரவாளர்கள் தாக்கிக்கொண்டதற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஆளும் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே திருச்சியிலுள்ள காவல் நிலையத்துக்குள் சென்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவதும், இந்தத் தாக்குதலில் அங்குள்ள பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது, 2007-ம் ஆண்டு மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவமும், அதில் அப்பாவி பத்திரிகையாளர்கள் உயிரிழந்ததும்தான் மக்களின் நினைவுக்கு வருகிறது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் திறந்துவைத்தார். அவற்றில் ராஜா காலனி பகுதியில் அமைக்கப்பட்ட டென்னிஸ் மைதானத்தைத் திறந்துவைத்ததும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அழைக்கப்படவில்லையென்றும், அவர் பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லையென்றும் தெரிவித்து, மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையில் முடிந்திருக்கிறது.

இந்த வன்முறையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் இருந்த நாற்காலிகள், இரு சக்கர வாகனம், கார் கண்ணாடி ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது குறித்து திருச்சியிலுள்ள நீதிமன்றக் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள்மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பதிலுக்கு மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பெண் காவலர் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வன்முறையில் காவல்துறையிலுள்ள பொருள்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்திருக்கின்றன.

திருச்சி சிவா
திருச்சி சிவா

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், காவல் நிலையத்தை கலவர பூமியாக ஆளும் கட்சியினர் மாற்றியிருக்கின்றனர். வன்முறையும், தி.மு.க-வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. தி.மு.க ஆட்சி என்றால் அங்கே சட்டம் - ஒழுங்கு சீரழியும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக, காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் விளங்குகிறது. அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும் மோதிக்கொள்வது என்பதும், ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதும், வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்.

இதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை சீரழித்துக்கொண்டிருக்கும் தி.மு.க அரசுக்கு, அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அளவுக்கு வன்முறை நடைபெற்றும், காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் வாய் திறக்காமல் இருப்பதை பார்க்கும்போது, அவரின் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லையோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது.

"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்"

எனும் திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப தவறிழைத்தவர்களின்மீது தக்க நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியும் வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.