தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசியதுபோல் இரு ஆடியோக்கள் வெளியாகின. அதில் விளையாட்டுத்துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் பற்றி பேசுவதுபோல் சில தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இது தி.மு.க-வினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

இதற்கிடையே, பி.டி.ஆர் குறித்த ஆடியோக்களை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க-வினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோதும் இதே கோரிக்கையை முன்வைத்தார். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி இரண்டாவது ஆடியோ வெளியான மாலையே முதலமைச்சர் வீட்டுக்குச் சென்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரிடம், ‘ரிசைன் பண்ணிட்டு விளக்கம் கொடுங்க’ என முதல்வர் கோபமாகப் பேசியதாக எல்லாம் தகவல்கள் வெளியாகின. அதற்கு மறுநாளே வீடியோ வடிவில் விளக்கம் கொடுத்தார் நிதியமைச்சர்.
பி.டி.ஆரிடம் முதல்வர் கோபமாகப் பேசியதைச் சமாதானப்படுத்தும் விதமாக மூத்த அமைச்சர்கள் சிலர், ‘பி.டி.ஆரை ரிசைன் பண்ண வச்சா, அது பா.ஜ.க-வுக்கு வெற்றியாகாதா... இன்னும் சில ஆடியோக்களை அவர்கள் வெளியிட்டால் அந்த அமைச்சர்களும் ரிசைன் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படுமே’ என பேசி சமாதானம் செய்திருக்கிறார்கள். இதையடுத்து பி.டி.ஆர்-மீது சற்று கோபம் குறைந்த முதல்வர் நேற்று (மே-1) காலை அவரை வீட்டுக்கு வரச் சொல்லி சந்தித்திருக்கிறார்.

முதல்வர், பி.டி.ஆர் சந்திப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க செய்தித் தொடர்புத்தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், “ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தான் வழக்கு தொடுக்க வேண்டும், தி.மு.க தொடுக்காது. ஆடியோ போலியானது என பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனே விளக்கம் கொடுத்திருக்கிறார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தான் புகார் கொடுக்க வேண்டும். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க-வினர்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருகிறார்” என்று கூறியவரிடம்,
‘நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் எனச் சொல்லப்படுகிறதே’ என்ற கேள்விக்கு, “நிதியமைச்சர் முதல்வரிடம் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நான் அங்கு இல்லை என்பதால், எனக்கு அது குறித்துத் தெரியாது” என்று தெரிவித்திருக்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்.
இந்தச் சந்திப்பு, பி.டி.ஆரின் அடுத்த நகர்வுகள் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “தி.மு.க-வினரின் மனதில் புழுங்கிக்கிடக்கும் விஷயங்களைத்தான் பி.டி.ஆர் பேசியிருக்கிறார். மற்றவர்களால் பேச முடியவில்லை. ஏனென்றால், பி.டி.ஆர் போல் பதவி போனாலும் பரவாயில்லை என்று செயல்படக்கூடியவர்கள் இங்கில்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பி.டி.ஆர் டெல்லி சங்கரி லால் ஹோட்டலில் தங்கியிருந்தபோது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போது டெல்லி சென்றாலும் தமிழ்நாடு இல்லத்தில் தங்காமல் இந்த ஹோட்டலில்தான் அதிகம் தங்குவார். அங்கு ஊடகத்துறையினர், மாற்று அமைப்பை சார்ந்தவர்கள் எனப் பலரையும் சந்திக்கும் பி.டி.ஆர் தன் மனதில் பட்டதைப் பேசுவார். அதுதான் இப்போது அவருக்கு நெருக்கடியாக வந்து நிற்கிறது.
இன்று டி.கே.எஸ்.இளங்கோவன், ‘ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தான் வழக்கு தொடுக்க வேண்டும், தி.மு.க தொடுக்காது’ என்று, கட்சிக்கும் பி.டி.ஆர் ஆடியோவுக்கும் தொடர்பில்லை என்பது போல்தான் பேசியிருக்கிறார். அதுவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
அதே நேரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்க வேண்டிய சில அஜெண்டாக்கள் தொடர்பாக ஆலோசிக்கத்தான் முதல்வர் பி.டி.ஆரை அழைத்திருக்கிறார் என்ற தகவலும் ஓடுகிறது” என்கிறார்கள்.
இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தொலைபேசி ஆடியோ விஷயத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் தந்திருப்பது ஒப்புதல் வாக்குமூலம்தான். ஒருவேளை அந்த ஆடியோ தவறானது என்று என்மீது வழக்கு தொடர்ந்தால் நிதியமைச்சரின் தொலைபேசி உரையாடல் குறித்த ஒரிஜினல் ஆடியோவை வெளியிட நான் தயார். எந்த ஆய்வகத்துக்கும் அதைப் பரிசோதனைக்கு உட்படுத்தலாம்” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இன்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் ஸ்டாலின் இந்த ஆடியோ விவகாரம் குறித்து பேசியிருப்பதும் கவனிக்கத்தக்கது. ``ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் அளிக்க விரும்பவில்லை. ஆடியோ குறித்து அமைச்சரே இரண்டு முறை விளக்கம் அளித்திருக்கிறார்” என பதிலளித்திருக்கிறார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.