மதுரை 14-வது வட்ட திமுக சார்பாக புதூர் பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள், கிறிஸ்துமஸ் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "கடந்த ஆண்டு எப்படிச் சாதனை படைத்தோமோ, அதேபோல வரும் ஆண்டிலும் நிதித்துறையில் ஒரு முன்னேற்றத்தைக் காண்போம்.

படித்தவர்கள், சிந்தனையுள்ளவர்கள் சரியான இடத்தில் இருந்தால், உரியவர்கள் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் சிறப்பான இடத்தை அடையலாம்.
பேராசிரியர் அன்பழகன் எனக்குத் தந்தை போன்றவர். என்னைத் தனியாக அழைத்து நீண்டநேரம் அறிவுரை கூறுவார். `இருக்கும் தொழிலை சிறப்பாகச் செய்து தனி அடையாளத்தை நிரூபித்துவிட்டு அரசியலுக்கு வாருங்கள்’ எனக் கூறினார். அந்த வார்த்தையின்படி நான் பல வங்கிகளில் பணியாற்றி, பொருளாதார முன்னேற்றம் அடைந்த பிறகுதான் அரசியலுக்கு வந்தேன்.

உதயநிதியை, `கட்சியின் அசையும் சொத்து’ என ஏன் கூறினேன் தெரியுமா... திமுக-வின் உறுப்பினர்களின் சராசரி வயது, மக்களின் சராசரி வயதைவிட அதிகமாக இருக்கிறது.
திமுக மூத்த அமைச்சர்கள் 70 முதல் 75 வயது உடையவர்களாக இருக்கின்றனர். இதனால் வயது வித்தியாசத்தைக் குறைக்கும் வகையில் இளைஞர் ஒருவர் பொறுப்புக்கு வருவது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்கிற வகையில் உதயநிதி அமைச்சராகியிருக்கிறார். இதனால்தான் கட்சியின் அசையும் சொத்து எனக் கூறினேன்.
என்னோடு பாசத்தோடு, பரஸ்பர உரிமையோடு நெருங்கி பழகுபவர் உதயநிதி. அண்ணன் என்ற முறையில் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ, அந்த வகையில் உதவி செய்வேன்.
உண்மையாக மதத்தைப் பின்பற்றும் எல்லா மதத்தினரோடும் பாசத்தோடும் அன்போடும் இருக்க வேண்டும். மதத்தைப் பின்பற்றுபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும், அடுத்தவரை நேசிக்க வேண்டும்.

பதவி, பொறுப்பு வரும் போகும். நாளை 10 சீட்டுகள்கூட கிடைக்காத கட்சியாக மாறலாம். ஆனால், மனிதனின் அன்பு, பாசத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உலகில் எனக்கு எத்தனை பதவி வந்தாலும் நான் பி.டி.ஆரின் மகன் என்பதே பெருமை, என் அடையாளம். அதற்கு மேல் யாராலும் எனக்கு எந்தப் பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது" என்றார்.