புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டவர்களுடன் பாஜக-வையும் விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று உப்பளம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், ``திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருந்து புதுச்சேரியின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடையவைத்தவர் நாராயணசாமி. புதுச்சேரியைப் பாதுகாக்க முடியாமல், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த அவர், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் ரங்கசாமியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதச் செயல்.
புதுச்சேரி மாநில முதல்வராக இருந்த நாராயணசாமி தனது ஐந்து ஆண்டுகள் முழுவதும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் துதி பாடிக்கொண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை முழுமையாக ஒழித்துவிட்டார். அதை எண்ணி வெட்கப்படாமல், தற்போது மீண்டும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இங்கிருந்து துதி பாடிக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநம் நாட்டின் பிரதமரை சர்வாதிகாரி என அவர் பேசுவது கண்டிக்கத்தக்க ஒன்று. திமுக முதல்வர் ஸ்டாலின் தன்னை மெச்சிக்கொள்வார் என்கிறவிதத்தில், ஒரு நாட்டின் பிரதமரை இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சிக்கும் நாராயணசாமிக்கு நாவடக்கம் தேவை.

நாடு முழுவதும் மின்துறையில் சில சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்தபோது அந்தத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்புடையது அல்ல என தமிழக முன்னாள் அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதியாக எதிர்த்தனர். அதனால்தான் தமிழ்நாட்டில் இன்றுவரை இலவச மின்சாரத் திட்டம் தொடர்கிறது. புதுச்சேரியில் மின்துறை தனியார்மயம் ஆக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். இருப்பினும், காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த பென்ஷன் திட்டம் முழுமையாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மின்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் நலன் எந்தவிதத்திலும் சிறு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 150 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்த நிலையில் அதில் ஒரு பைசாகூட செலவு செய்யாமல் வீண் வறட்டு வீராப்பு செய்து, அந்தத் திட்டத்தையே பாழடித்ததுதான் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. தற்போது 500 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு திட்டங்களுக்கு டெண்டர்விடப்பட்டு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது வழக்கம்போல இதையும் நாராயணசாமி குறை கூறிக்கொண்டிருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் ரங்கசாமி பலகீனமான முதல்வராக இருப்பதாக நாராயணசாமி கூறுவது தமாஷாக உள்ளது. உறுதியாக இருக்கவேண்டிய திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் தினம்தோறும் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்துக்கொண்டிருப்பதை நாராயணசாமி ஏன் உணர்வதில்லை? எதிர்க்கவேண்டிய கட்சிகளை தனது திறமையால் அடக்கிவைத்து முதல்வர் ரங்கசாமி பலம் மிக்கவராக இருக்கிறார் என்பதை நாராயணசாமி தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.