தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினும். அவருடைய அமைச்சர்களும் மத்திய அரசை `ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டுவருகிறார்கள். அதற்கு தமிழக பா.ஜ.க-வினர் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், கடந்த 27-ம் தேதி புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்–பா.ஜ.க தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப்பரப்பு’ என்று உறுதிமொழியை வாசித்தார். அமைச்சர்கள் அனைவரும் அதை அப்படியே பின்பற்றி உறுதிமொழியை ஏற்றனர். ’இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், அதே வார்த்தையைப் பயன்படுத்திய தமிழிசைக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
அதையடுத்து இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகை விளக்கமளித்திருக்கிறது. அதில். ``2021, ஜூன் 27-ம் தேதி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள். துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய அமைச்சர்களுக்குத் தமிழில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்ற பெருமைமிகு நிகழ்வும் நடந்தேறியது. அந்த நிகழ்வில் அரசியலமைப்பு சட்டத்தின்படி, புதுச்சேரி அரசால் பல ஆண்டுகளாக மரபாகப் பயன்படுத்தப்படும் தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் மேற்கொள்ளாமல் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்தப் பெருமையை மறைக்கும் அளவுக்கு ’இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை வேண்டுமென்றே திரித்து கூறப்பட்டுவருகிறது. அந்த நிகழ்வில் ஒன்றிய அரசு என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் ஒன்றிய அரசு என்று துணைநிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம் பொதுவாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்ரன. தமிழக அமைச்சர்களின் பதவியேற்பின்போது `தமிழக அமைச்சர்களாக பதவி ஏற்கிறோம்...’ என்று எப்படி கூறினார்களோ அதேபோல்தான் ‘Indian Union Territory of Puducherry’ என்ற வாசகம் ‘இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு’ என மிக அழகாக வெகு காலத்துக்கு முன்பே புதுச்சேரி தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படிவம்தான் புதுச்சேரியில் நீண்டகாலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது. பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து, அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை ’Indian Union Territory’ என்று கூறுகிறார்கள். அதாவது இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு. அதனால் இங்கு `ஒன்றியம்’ எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயுமே மத்திய அரசை என்று குறிப்பிடவில்லை. அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாகத் திரித்துக் கூறுவது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி இந்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் நிலப்பரப்பு. அதனால்தான் `இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு’ என்று சொல்கிறோமே தவிர, இந்திய தேசத்துக்கான மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழா அங்கே நடைபெறவில்லை.
மாநில அரசுகளின் பதவியேற்பு விழாவில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம்பெறாது. அப்படியிருக்கையில், புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது. அதனால்தான் இந்த விளக்கம் தேவைப்படுகிறது. தமிழ் மண்ணில், தமிழில் பதவி ஏற்ற பெருமை நிலை நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால், அதன் மாண்பை மறைக்கும் அளவுக்குத் தவறாக இந்திய ஒன்றியம் என்ற கருத்து பரப்பப்பட்டுவருகிறது. இப்படியான சில தேவையற்ற சலசலப்புகளால், பலரது தியாகத்தால் உருவான இந்திய இறையாண்மையைக் குறைக்க முயல வேண்டாம் என்று சொல்லப்படுகிறது” என்று விளக்களித்திருக்கிறது ஆளுநர் மாளிகை.