புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவுப்படி சமூகநலத்துறைச் செயலர் உதயக்குமார் அனைத்துச் செயலர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கு ஆதார் எண் குறித்த அறிவிப்பு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த அறிவிப்பில், “சேவைகள், பலன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரைப் பயன்படுத்துவது, அரசாங்க விநியோகச் செயல்முறைகளை எளிதாக்குகிறது, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவருகிறது, மேலும், பயனாளிகள் தங்கள் உரிமைகளை வசதியாகவும், தடையின்றி நேரடியாகவும் பெற முடிகிறது. சமூகநலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 13 திட்டங்கள் முக்கியமானவை.

1. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான திருமணத்துக்கான ஊக்கத்தொகை வழங்குதல்.
2. மாற்றுத்திறனாளிகளின் சொந்த வாகனங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குதல்.
3. மோட்டார் வாகனங்கள் வாங்க மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்குதல்.
4. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்.
5. கண்தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை.
6. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருது.
7. பெருந்தலைவர் காமராஜ் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் இறுதிச் சடங்குகளுக்கு நிதியுதவி.
8. மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டிகள் வழங்குதல்.
9. மாற்றுத்திறனாளிகளுக்கு, போக்குவரத்து உதவித்தொகை வழங்குதல்.
10. திறமையான பார்வையற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்.
11. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பார்வையற்ற மாணவர்களுக்கு நிதியுதவி.
12. வயதானவர்களுக்கு போர்வை மற்றும் காலணிகள் இலவச விநியோகம்.
13. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள், முதியோர்கள், ஊனமுற்றோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் நலனுக்காகக் குடியிருப்பு இல்லங்களை நடத்தும் அரசு சாரா நிறுவனங்களுக்கான மானியம் பெறுவோர்.
மேற்கண்ட அனைத்து நலத்திட்டங்களுக்கும் இனி ஆதார் எண் அவசியம் தேவை என்று துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தியிருக்கிறார். இந்தத் திட்டங்கள் புதுச்சேரி நிதி மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதியில் செயல்படுகிறது. இந்தத் திட்டங்களில் பலன்பெறுவோர், பெறத் தகுதியுடையோர் ஆதார் எண் ஆதாரத்தை அளிப்பது அவசியம். திட்டங்களில் பலன் கிடைக்க ஆதார் இல்லாதோர் முன்னதாக விண்ணப்பிப்பது அவசியம். இந்த அறிவிப்பு உடனே நடைமுறைக்கு வருகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு ஆதார் எண் அவசியம் என, 2022 டிசம்பர் மாதம் தமிழக அரசும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.