Published:Updated:

குமரி: `தமிழர்களைப் பிறர் ஆட்சி செய்ய தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே வரலாறு! - ராகுல்

கன்னியாகுமரியில் பேசும் ராகுல் காந்தி

`இந்தியப் பொருளாதார மேதைகள், இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்தும் என்றார்கள். ஆனால், காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதைக் கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார்' - ராகுல் காந்தி.

Published:Updated:

குமரி: `தமிழர்களைப் பிறர் ஆட்சி செய்ய தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே வரலாறு! - ராகுல்

`இந்தியப் பொருளாதார மேதைகள், இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்தும் என்றார்கள். ஆனால், காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதைக் கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார்' - ராகுல் காந்தி.

கன்னியாகுமரியில் பேசும் ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி பகுதியில் ராகுல் காந்தி பேசுகையில், ``உங்கள் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இன்று நம் தலைவர் வசந்தகுமாரைப் பற்றி நினைவுகூர்கிறோம். எதற்காக என்றால், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், மற்ற அரசு அவரை மிரட்டினாலும் அஞ்சாமல் அவர் காங்கிரஸ் பின்னால் உறுதியாக நின்றதால் அவரை நினைவுகூர்கிறோம். அவர் எப்போதுமே பின்தங்கிய மக்களுக்காக, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள விளிம்புநிலை மக்களுக்காக உழைத்துக்கொண்டிருந்தார்.

ஏழைக் குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்தார். ஒரு குடும்பத்துக்குத் திருமணம் செய்ய நிதி உதவியாக 10,000 ரூபாய் வீதம் 1,000 குடும்பங்களுக்கு உதவிசெய்திருக்கிறார். விதவைகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பல்வேறு நீர்நிலைகளைச் சீரமைத்திருக்கிறார். ஏழைகளுக்கு உணவு அளித்தவர். அவரைப் போன்ற வலிமை வாய்ந்த, திறமை வாய்ந்த, சக்தி படைத்த மனிதரை இழந்திருக்கிறோம்.

பிரசாரத்துக்காக கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி
பிரசாரத்துக்காக கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி

இரண்டு தகவல்களைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் டெல்லியிலுள்ள மோடி அரசு தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாசாரத்துக்கோ, தமிழ் நாகரிகத்துக்கோ மதிப்பு கொடுப்பதாக இல்லை. இங்குள்ள முதல்வர் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். தமிழக முதல்வர் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தாமல் மோடி சொல்வதைச் செய்பவராக இருப்பது வருத்தமளிக்கிறது. மோடி தொலைக்காட்சியைப் பார்த்து ரசிக்கக்கூடியவராக இருக்கிறார். தமிழகத்தையும் தொலைக்காட்சியைப் பார்ப்பதுபோலத்தான் பார்க்கிறார். ரிமோட் மூலம் தொலைக்காட்சியை மாற்றுவது போன்று தமிழகத்தை மாற்ற நினைக்கிறார்.

தமிழக முதல்வர் ஊழல் செய்ததால் சி.பி.ஐ., வருமான வரித்துறையைவைத்து மிரட்டிவருகிறார். தமிழர்களைத் தவிர பிறர் ஆட்சி நடத்தினால் தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது வரலாறு. இந்தத் தேர்தலில் நாம் அதைப் பின்பற்ற வேண்டும். தமிழ் மக்களை உண்மையாக யார் முன்னிறுத்திச் செயல்படுபடுவாரோ அவர்தான் முதல்வராக வர வேண்டும்.

இரண்டாவதாக தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம். நேற்று நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்தியக் குடிமகன். அந்த நேரத்தில், இந்தியப் பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்தும் என்றார். ஆனால், காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதைக் கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். காமராஜர் முயற்சியால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெருமை காமராஜரைச் சாரும். அதனால்தான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி எனக் கூறினேன்.

ராகுல் பிரசாரம்
ராகுல் பிரசாரம்

மோடியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் சிறுமைப்படுத்த முயல்கின்றன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் எனக் கொண்டுவர முயல்கிறார் மோடி. தமிழ், பெங்காளி ஆகியவை இந்திய மொழிகள் இல்லையா... தமிழ்க் கலாசாரம் இந்தியக் கலாசாரம் இல்லையா... தமிழ் மொழி, கலாசாரம், பண்பாட்டைக் காப்பாற்ற நான் இருக்கிறேன். அனைத்து மொழி, கலாசாரம், மதங்களைக் காக்க நான் கண்டிப்பாகத் துணை நிற்பேன். அனைவருக்கும் நன்றி" என்றார்.