எத்தனையோ அமைச்சர்கள் இருக்கும் போது, அத்தனை பேரையும் தாண்டி ராஜகண்ணப்பனிடமிருந்த போக்குவரத்து துறையை அரியலூர் அமைச்சர் சிவசங்கருக்கு கொடுத்த விஷயம்தான் அறிவாலய வட்டாரங்களில் பேசுபொருளாகி மாறியிருக்கிறது. அதே நேரத்தில், கட்சித் தலைமையின் அதிருப்தி வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆ.ராசாவுக்கு செக் வைப்பதற்காகவே சிவசங்கருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல்கள் அனல் பறக்கின்றன.

பத்து மாதங்களுக்குப் பிறகு முதன் முறையாக அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அதிகபட்ச தலையீடு, திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் போட்ட விவகாரம், இராமநாதபுரம் மா.செ.யுடனான உரசல், லோக்கல் தி.மு.க-வினரின் அதிருப்தி என சர்ச்சை வட்டத்திற்குள் சுற்றி வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதவிர, கடந்த மாதம் போக்குவரத்துத் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய விவகாரத்தில் ராஜகண்ணப்பனுக்கு சிக்கல் அதிகமானது. இந்நிலையில், அரசு அதிகாரி ஒருவரை ஜாதியைச் சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன்

மிரட்டிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, துபாயிலிருந்து வந்ததும் வராததுமாக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனின் பதவியைப் பிடுங்கி அரியலூரைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஒப்படைத்து விட்டு, சிவசங்கர் வகித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை ராஜகண்ணப்பனுக்கு மடைமாற்றி விட்டார் முதல்வர் ஸ்டாலின்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தி.மு.க தலைமையின் இந்த நடவடிக்கையானது, தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் சுய பரிசோதனைக்குள்ளாகி இருக்கும் நிலையில், `முக்கிய இலாகா மற்றும் ராசாவுக்கு செக்’ என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்து விட்ட உற்சாகத்தில் இருக்கின்றனராம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர்கள்.

அதாவது, கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் முடிசூடா மன்னனாக வலம் வந்த ஆ.ராசா சமீப காலமாக ‘சைலன்ட் மோடில்’ இருந்து வந்த நிலையில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் ஆதரவு வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் துவங்கியது. இது பொறுக்காததால் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடக்கும் விழாக்களில் அமைச்சரைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர் ராசாவின் ஆதரவாளர்கள். ‘போஸ்டர்களில் கூட அவரின் பெயரை அச்சடிக்கக் கூடாது’ என உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படி, இடையில் நீறுபூத்த நெருப்பாக இருந்த உட்கட்சி பூசலை முன்னர் ஒருமுறை பேராசிரியர் அன்பழகன் தலையிட்டுச் சரி செய்த சம்பவமும் நடந்ததாம். இந்நிலையில்தான், முதன்முறையாக நடந்த அமைச்சரவை மாற்றத்தில் ‘ஜாக்பாட்’ அடித்திருக்கிறார் அமைச்சர் சிவசங்கர். இது, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ராசா தரப்பினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில்,

‘என்னதான் நடக்கிறது ராசா – சிவசங்கர் விவகாரத்தில்?’ என அறிவதற்காகக் கட்சி உள்விவகாரம் அறிந்த முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``வரலாறு திரும்புகிறது. ஏற்கனவே அரியலூர் மற்றும் பெரம்பலூரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க-வின் துணை செயலாளராக 1983 முதல் 91 வரை இருந்தவர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடைய தந்தை சிவசுப்பிரமணியன். எம்.எல்.ஏ., எம்.பி. எனப் பதவி வகித்த அவர்தான், சட்டம் படிக்கிற காலத்திலேயே ஆ.ராசாவின் கரம் பிடித்து அவரை கட்சிக்குள் கொண்டு வந்தவர்.
ராசாவின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவரின் பங்கு இருந்தது. ஆனால், கலைஞருக்கு நெருக்கமாகி, எம்.பி., மத்திய அமைச்சர் என அடுத்தடுத்து அரசியல் பரிணாமம் எடுத்த ஆ.ராசா சிவசுப்பிரமணியனையும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் கலைஞர் குடும்பத்துக்கு நெருக்கமான பிறகு, தன்னைத் தவிர இந்த மாவட்டங்களில் வேறு யாருடைய வளர்ச்சியையும் விரும்பவில்லை. இவ்வளவு ஏன்? ஒரு கட்டத்தில் கட்சி சீனியரான கே.என்.நேருவுக்கே ‘டஃப்’ கொடுக்கத் துவங்கினார் ராசா.

பிறகு, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் பொதுத்தொகுதியாக மாறவே, ஊட்டிக்குச் சென்ற ராஜா, அரியலூர் பெரம்பலூரில் உள்ள தனது ஆதரவாளர்களை மறந்து விட்டு, திருச்சியிலிருந்த நெப்போலியனை இங்குக் கொண்டு வந்ததோடு, அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி சீமானூர் பிரபுவையும், அடுத்து கூட்டணிக் கட்சி சார்பில் சிவகாமி ஐ.ஏ.எஸ்.சையும் பெரம்பலூரில் போட்டியிட வைத்தார். அப்போதே ஆ.ராசாவின் ஆதரவாளர்கள் அதிருப்தியாளர்களாக மாறத்துவங்கினர். அதே நேரத்தில், உதயநிதியின் அரசியல் எழுச்சிக்குப் பிறகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும் வளர்ச்சி துவங்கியது என்றுதான் கூற வேண்டும்.
கடந்த 2020-ல் அரியலூர் இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக்கின் சகோதரர் வினோத் ஸ்காட்லாந்தில் திடீர் மரணமடைந்த போது, அவரது பிரேதத்தை இங்குக் கொண்டு வர உதயநிதியின் உதவியை மா.செ.வான எஸ்.எஸ்.சிவசங்கர் நாடவே, அவரோ, ஆ.ராசாவை ‘ஓவர்டேக்’ செய்து எம்.பி.தமிழச்சி தங்க பாண்டியன் மூலமாக வினோத்தின் பிரேதத்தை இங்குக் கொண்டு வந்த போதே உதயநிதிக்கும் அமைச்சர் சிவசங்கருக்கும் உள்ள நட்பு வெளியானது.

பிறகு, அரியலூர் – செந்துறை சாலையில் புதிய கட்சி அலுவலகம் கட்டிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதை உதயநிதியைக் கொண்டே திறந்து வைத்த போதுதான் அவர்களுக்கிடையேயான நெருக்கம் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. அப்போது, ‘ஸ்டாலினுக்கு இளைஞரணி பதவி வழங்கப்பட்ட நேரத்தில், பலரும் அதை குடும்ப அரசியல் என எதிர்த்த போது, முதன்முறையாக அவரை அரியலூருக்கு அழைத்து வந்து கொடியேற்ற வைத்து உற்சாகம் தந்தவர் அமைச்சர் சிவசங்கரின் தந்தை சிவசுப்பிரமணியன்தான்’ என மூத்த நிர்வாகிகள் சிலர் உதயநிதியிடமும் கூறியிருக்கிறார்கள். அரியலூர்,பெரம்பலூர் என்றால் ராசா என்கிற நிலை உள்ளது இதனை மாற்றவேண்டும் என்பதற்காக ராசாவுக்கு எதிராக சிவசங்கரை கொண்டுவர தி.மு.க தலைமை நினைக்கிறது. அதன் முன்னோட்டம் தான் இந்த அமைச்சர் பதவி” என்கிறார்கள்.