தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19-ம் தேதி, மாவட்ட துணை ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு 92 பேரை தேர்ந்தெடுப்பதற்கான, தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேர்வின் தற்காலிக விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் கடந்த 28-ம் தேதியன்று வெளியிட்டது. இந்த நிலையில் குரூப்-1 முதல்நிலை தேர்வில் குளறுபடி நடந்திருப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம், டி.என்.பி.எஸ்.சி, நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல விடைகள் தவறாக உள்ளன. முதல் தொகுதி போட்டித் தேர்வுகளில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதும், முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் விகிதம் குறைக்கப்பட்டிருப்பதும் நியாயமற்றவையாகும். தற்காலிக விடைகளில் உள்ள பிழைகளை தேர்வர்கள் சுட்டிக்காட்டுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். ஆனால், தேர்வர்கள் தெரிவித்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா அல்லது பிழையான விடைகளின் அடிப்படையிலேயே விடைத்தாள்கள் திருத்தப்பட்டனவா? என்பது யாருக்கும் தெரியாது.

முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளில் செய்யப்பட்டுள்ள இரு மாற்றங்கள் தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிப்பவையாக உள்ளன. முதல் நிலை தேர்வுக்கான வினாத்தாள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டிருக்கும். இவற்றில் தமிழ் வடிவம் தான் இறுதியானது என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. ஆனால், ஆங்கில வடிவம் தான் இறுதியானது என்று வினாத்தாளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது, தமிழ்வழியில் படித்து போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

அதேபோல், கடந்த காலங்களில் முதல் தொகுதி பணிகளுக்கு முதல் நிலைத் தேர்வு நடத்தப்படும்போது, மொத்த பணியிடங்கள் எவ்வளவோ, அதைவிட 50 மடங்கு தேர்வர்கள், அதாவது 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை 1:20 என்ற விகிதத்தில்தான் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிராக அமையும். மேலும், அந்த நடைமுறையை இப்போது திடீரென மாற்றுவது சமூகநீதிக்கு எதிரான செயலாகவே அமையும். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் விதம் சீரானதாக இல்லை.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இ.ஆ.ப., இ.கா.ப உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை குறித்த காலத்தில் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுகள் சராசரியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்தப்படுகின்றன. அதனால், வயது வரம்பை எட்டும் நிலையில் உள்ளவர்களுக்கு 3 முறை தேர்வு எழுதுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டும்தான் தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. இதில் சிறிய தவறு நடந்தாலும் தேர்வர்கள் தங்களின் முதல் தொகுதி பணி கனவை இழக்க வேண்டியுள்ளது.

எனவே, தேர்வர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விடைக்குறிப்புகளில் தேர்வர்கள் சுட்டிக் காட்டிய பிழைகள் அனைத்தும் கல்வியாளர்களைக் கொண்டு சரி பார்க்கப்பட வேண்டும். முதல்நிலைத் தேர்வை எழுதியவர்களில் இருந்து 1:50 என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை வலியுறுத்துகிறேன்" என ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.