மதுரை புறநகர், மேற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அநாதையாகக் கலங்கி நின்ற நம்மை கலங்கரை விளக்கமாக இந்த இயக்கத்தையும் தொண்டர்களையும் அரணாக காத்துவருபவர் எடப்பாடியார்.

தி.மு.க அரசு, சர்வாதிகார அரசாங்கமாக இருக்கிறது. 520 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். அதை நிறைவேற்றவில்லை. இதைத் தட்டிக்கேட்க பொதுவுடமை இயக்கங்கள்கூட முன்வரவில்லை. அதனால் தலைக்கனத்துடன், மமதையுடன் இந்த அரசு இருந்துவருகிறது. இந்த அரசுக்கு சிம்மசொப்பனமாக எடப்பாடியார் இருந்து எதிர்த்துப் போராடி வருகிறார்.
எடப்பாடியார் தேனி, விருதுநகர், மதுரை, நெல்லை, சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்குச் செல்லும்போது, மக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் வரவேற்பளித்தனர். இதைக் கண்டு ஆளுங்கட்சியும், துரோகிகளும் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் ஒரு நபர் அநாகரிகமாக நடந்துகொண்டார். அவர்மீது வழக்கு இல்லை. ஆனால், பொறுமை காத்த எடப்பாடியார்மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்குச் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. திருச்சியில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. காவல் நிலையத்தில் சண்டையிட்டதால் பெண் காவலர் காயமடைந்தார்.

காவல்துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்... உங்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா?
தமிழகத்தின் நிர்வாகக் குளறுபடியால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்திருக்கிறது. ஹால் டிக்கெட் வழங்கப்பட்டும் 50,000 பேர் தமிழ்த் தேர்வை எழுதவில்லை. தமிழைக் காப்போம் என்று கூறியவர்கள்தான், இந்த அவல நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத்துறையில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மறைத்து, எடப்பாடியார் செய்த சாதனைகளை மறைத்து... கருணாநிதி காலத்திலிருந்து சிறப்பாகச் செயல்பட்டதாக முதலமைச்சர் பொய் பேசியிருக்கிறார். டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலமாக, 2020-ம் ஆண்டு மத்திய அரசிடம் எடப்பாடியார் தமிழகத்துக்கு விருது பெற்றுத் தந்தார்" என்றார்.