தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'DMK Files' என்ற தலைப்பில், தி.மு.க தலைவர்கள், அமைச்சர்களின் ஊழல் பட்டியல் எனும் சில தரவுகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி `சரியான ஆதாரங்களை தி.மு.க அலுவலகத்தில் அண்ணாமலை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருந்தார்.

மேலும், ``பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாட்டிய குற்றச்சாட்டுக்கு மன்னிப்புக் கேட்டு, 48 மணி நேரத்தில் ரூ.500 கோடி இழப்பீடாகத் தர வேண்டும்" என நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "இதற்கு முன்னர் BGR நிறுவனத்துக்கு முறைகேடாக தி.மு.க வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சட்ட அறிக்கை அனுப்பினார்கள். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக ரூ.100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கை அனுப்பினார்கள்.
அதைத் தொடர்ந்து மீண்டும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியிருக்கிறார். கோடிகளில் சொத்துகளைக் குவித்துவைத்திருக்கும் தி.மு.க-வினர் இருக்கும்போது, என்னிடம் மேலும் ரூ.500 கோடி கேட்கிறார் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. `DMK Files’ என்ற பெயரில் பா.ஜ.க வெளியிட்ட காணொளி மற்றும் அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநில தலைவராக நான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை முழுவதுமாகப் பார்த்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்தக் காணொளியின் இணைப்பையும், இணையதள முகவரியையும் தாங்கள் அனுப்பிய சட்ட அறிக்கையில் வெளியிட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க-வினர் செய்த சொத்துக்குவிப்பை, தமிழக மக்கள் அறிந்துகொள்ள, ஏப்ரல் 14-ம் தேதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு உதவியதில் எனக்கும் மகிழ்ச்சியே. தாங்கள் வெளியிட்டிருக்கும் சட்ட அறிக்கையில், தி.மு.க-வினருக்குச் சொந்தமான ரூ.3,478.18 கோடி மதிப்பிலான பள்ளிகளும், ரூ.34,184.71 கோடி மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பும் பொய்யானவை என்று தெரிவித்துவிட்டு,
அடுத்த வரியில், ஒருவர் தி.மு.க உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள், கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒருபுறம் இது தி.மு.க சொத்து இல்லை என்றும், மறுபுறம், வழங்கப்பட்ட தி.மு.க-வினரின் சொத்து விவரம் பொய்யென்று கூறுவதற்கு மட்டும் தி.மு.க அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா... பள்ளி மற்றும் கல்லூரி என்ற தலைப்பின் கீழ், ஒவ்வோர் ஊரிலும் தி.மு.க-வினருக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டன.

உதாரணத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் நடத்தும் 'சன்ஷைன் சீனியர் செகண்டரி ஸ்கூல்', மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் உறவினர் நடத்தும் 'தி சென்னை பப்ளிக் ஸ்கூல்', அமைச்சர் எ.வ.வேலு-வின் மனைவி நடத்தும் 'ஜீவா வேலு இன்டர்நேஷனல் ஸ்கூல்', 'அருணை பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி' போன்றவற்றை ஒவ்வொருவர் பெயரிலும் காண்பித்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை, தி.மு.க தலைமையகமான அறிவாலயத்தில் ஒப்படைக்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை. ஆர்.எஸ்.பாரதி ஏதாவது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக, இப்படி மழுப்புவதுபோல் தெரிகிறது.
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை சி.பி.ஐ-யிடம் அளிக்கவிருக்கிறோம். உங்கள் கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது மட்டுமல்லாமல், முன்னுக்குப் பின் முரணான சில கருத்துகளை, ஆர்.எஸ்.பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும், ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்திருக்கிறார்.

ஒன்றில், நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். மற்றொன்றில், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்துக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நோபல் புரொமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் போன்ற நிறுவனங்களில் பஷீர் முகமது என்பவர் இயக்குநராக இருந்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார்... தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
இதே நோபல் குழுமத்தின் ஒரு நிறுவனமான நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பஷீர் முகம்மதுவுடன் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா இயக்குநராக இருந்திருக்க்கிறார். நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் ரூ.1,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட செய்தியை, நேற்று எனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியாக எழுப்பியிருக்கிறேன். நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட், நோபல் புரொமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் இவை ஒரு குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதும், தி.மு.க-வினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி யாருடையது என்றும் தமிழக மக்களின் சார்பாக நான் மீண்டும் ஒரு முறை கேள்வி எழுப்புகிறேன்.

இந்த முறையாவது பதில் அளிப்பீர்களா... நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். என்மீதும், பா.ஜக-வின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூ.500 கோடியே 1 ரூபாய் இழப்பீடாகக் கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்குச் செலுத்த விரும்புகிறேன்.
ரூ.4,400 கோடி மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை, 2021-ம் ஆண்டு, மே மாதம் 19-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை, சமூக வலைதளத்தில் நான் பார்த்தேன். ரூ.100 கோடி பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும், ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்.
அடுத்த 48 மணி நேரத்தில், என்மீதும், எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்று மிகப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.