அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, பல சர்ச்சைகள் வெடித்தன. இதற்கிடையே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பின்போது, தனக்குத் தெரியாமல் தமிழ்வழிப் பாடப்பிரிவுகளை ரத்துசெய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடப்பிரிவுகளை ரத்துசெய்வதாக அறிவித்து, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், கடந்த 20-ம் தேதி அன்று அறிவிப்பு வெளியானது. அதை எதிர்த்து, தமிழக பாஜக சார்பில், 25-ம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகே, தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் ரத்துசெய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தமிழக பா.ஜ.க எதிர்ப்பு அறிக்கை வெளியான ஐந்து நாள்கள் வரை, அமைச்சருக்கு இந்த அறிவிப்பு குறித்துத் தெரியாதா அல்லது நாங்கள் கேள்வி எழுப்பியிருக்காவிட்டால், இதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று இருந்தாரா... அரசுக்குத் தெரியாமலேயே, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பதாக அமைச்சர் பொன்முடி கூறுகிறார்.

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் இருக்கிறார். அப்படியிருக்கையில் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசுக்குத் தெரியவில்லையென்றால், ஆட்சிக்குழுவில் இடம் பிடிப்பதால் என்ன பயன்... அரசுக்குத் தெரிந்தே தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் ரத்துசெய்யும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறைக்க ஏதேதோ கூறி மழுப்பப் பார்க்கிறார் அமைச்சர் பொன்முடி.
பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று கூறியிருக்கிறார் அமைச்சர் பொன்முடி. உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர் சந்திப்பில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் அமைச்சர், கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ்வழிக் கல்வியை மாணவர்கள் மத்தியில் பரவலாக்க, தமிழ்வழிப் பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்னென்ன என்பதைச் சொல்லத் தயாரா?

மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறாரா அண்ணாமலை என்று கேட்டிருக்கிறார் அமைச்சர். என்னைப் பொறுத்தவரையில், என் மகன் படிக்கும் பள்ளியில் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இருபது வயதில், அவர் ஐந்து மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், இதேபோல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
உலகத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க, நம் குழந்தைகள் பல மொழிகள் கற்றுத் தெரிவது நலம். தி.மு.க முதல் குடும்பத்தினரும், மற்ற தி.மு.க-வினரும் நடத்தும் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையா கடைபிடிக்கப்படுகிறது... பணமிருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், பணமில்லாத ஏழை, எளிய மக்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம்.

மூன்று மொழிகள் என்றால் இந்தி கட்டாயம் என்ற திசைதிருப்பலை தி.மு.க-வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் கீழ், மும்மொழிக் கற்றலில் இந்தி கட்டாயம் இல்லை. ஆனால் தாய்மொழி கற்பது கட்டாயம். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக தாய்மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பது புதிய கல்விக் கொள்கையில்தான். இதை உங்களால் மறுக்க முடியுமா... மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா?" எனச் சவால் விடுத்திருக்கிறார்.