தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்களுக்கான தடைக்காலம் இன்றுடன் (14-ம் தேதி) முடிவதை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகிவருகின்றனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தக் காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 543 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த 61 நாள்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளைச் சரிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றுவருவதால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடித் தடைக்காலம் இன்று (14-ம் தேதி) முடிவடைவதைத் தொடர்ந்து சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு நாளை (17-ம் தேதி) முதல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தயாராகிவருகின்றனர். விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல், படகுகளில் ஐஸ் கட்டிகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடிக்குத் தேவையான பொருள்களை ஏற்றுதல் போன்ற பணிகளை இன்று மேற்கொண்டனர்.

தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்வதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீன்வர்கள் தயாராகிவருகின்றனர். இது குறித்து, தூத்துக்குடி மீனவர் சங்கத் தலைவர் தர்ம பிச்சையிடம் பேசினோம். ”கடந்த ஏப்ரல் 15 முதல் தடைவிதிக்கப்பட்டதால் நாங்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. தற்போது தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் நாளை நாங்கள் மீன்பிடிக்கச் செல்வதற்காக தயாராகிவருகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த மீன்பிடித்தடை காலத்தில் எங்களுக்கு வழங்கவேண்டிய தடைக்கால நிவாரணத் தொகையை அரசு இதுவரை வழங்கவில்லை. நாளை முதல் மீன் பிடிக்கச் செல்லவிருக்கிறோம். தடைக்காலத்தில் தரப்படாத உதவித்தொகை இனி கிடைத்தும் பலனில்லை. மீன்பிடி தடைக்காலத்தில் நாங்கள் அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வீட்டில் இருக்கிறோம். ஆனால், கேரளா மாநில விசைப்படகுகள் இங்கு வந்து மீன் பிடித்து நாசப்படுத்திவருகின்றன. இதைப் பலமுறை சுட்டிக்காட்டியும் தடுக்க மீன் வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மீன்பிடித்தடைக்கால நிவாரணமாக அரசு தரும் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவியால் நாங்கள் இரண்டு, மூன்று வாரங்களுக்குத்தான் சாப்பிட முடியும். நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். எங்களைப் போன்ற மீனவர்களுக்கு மீன்பிடித்தலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். மீனவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும்” என்றார்.