
“இந்திய ஜனநாயகம் சவப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டு விட்டது. நீதித்துறை எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருக்க வேண்டு மென அரசு விரும்புவது போலவே அவர்களும் இருக்கிறார்கள்.
நீதித்துறை எந்த அளவுக்குச் செயலற்று இருக்கிற தென்று உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.”
1975ஆம் ஆண்டில் இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது இந்த அறிக்கையை வெளியிட்டவர் அப்போதைய பார் கவுன்சில் சேர்மன் ராம்ஜெத்மலானி. தன் இறுதிக்காலத்தில் தான் சார்ந்திருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் கடும் விமர்சனத்தை முன்வைக்க ஜெத்மலானி தவறியதில்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் கருத்தைச் சொல்லும் அசாத்திய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் ஜெத்மலானி. இந்திய அளவில் மிகவும் சர்ச்சைக்குரிய வழக்கறிஞர் என்றால் நினைவுக்கு வரும் பெயர் ஜெத்மலானிதான். அவர் நடத்திய வழக்குகள் அத்தனையும் சர்ச்சை ரகம்தான்.

இந்திராகாந்தி கொலைக்குற்றவாளிகள் சட்வந்த் சிங், ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் முருகன், பங்குச்சந்தை மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தா, ஹவாலா மோசடியில் சிக்கிய எல்.கே.அத்வானி, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் மாட்டிய லல்லுபிரசாத் யாதவ், 2G வழக்கில் கைதான கனிமொழி, சொத்துக்குவிப்பு வழக்கைச் சந்தித்த ஜெயலலிதா, சுரங்க முறை கேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எடியூரப்பா, போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சுமத்தப் பட்ட அமித்ஷா ஆகியோருக்கு ஆதரவாக சட்டத்தைக் கொண்டு போராடியவர். எல்லா வற்றிலும் அவர் ஜெயித்தார் என்று சொல்வ தற்கில்லை. ஆனால் பிரபலமான வழக்குகள் என்றாலே, அதில் ஜெத்மலானி வாதிடுகிறாரா என்று பார்ப்பது வழக்கம்.
கள்ளக்கடத்தல் மன்னன் ஹாஜி மஸ்தான், நாடாளுமன்றத் தாக்குதல் குற்றம் சுமத்தப்பட்ட அப்சல்குரு ஆகியோருக்கும்கூட அவர் வாதாடி யிருக்கிறார். எப்போதும் குற்றம் சுமத்தப்பட்டவர் களின் பக்கம் நின்றே ஆஜராகிறீர்களே என ஒருமுறை அவரிடம் கேட்டதற்கு, “ஒருவர் குற்றம் செய்திருந்தாலும், அவர் தரப்பிலிருந்து சொல்வதற்கு ஒரு நியாயம் இருக்கும். அதை, அவர்களின் பிரதிநிதியாக இருந்து சொல்கிறேன்” என்றார்.
எம்.பி, மத்திய அமைச்சர் எனப் பல பதவிகள் அவரைத் தேடிவந்தாலும் அவர் பெரிதும் நேசித்தது தன் வழக்கறிஞர் தொழிலைத்தான். அதனால்தான் தன் 92-வது வயது வரை வழக்கறிஞர் தொழிலை விடவில்லை. இரண்டு ஆண்டுகளாக இயலாமையால் ஓய்வில் இருந்த அவருக்கு செப்டம்பர் 8-ல் நிரந்தர ஓய்வு கொடுத்திருக்கிறது இயற்கை.