அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி திமுக-வை சாடி பேசியிருந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய 'தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,தேவையில்லாமல் தி மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார். “பழைய பழனிசாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா. நடக்காது ஸ்டாலின் அவர்களே” என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார்.
அவர்களின் கட்சியில் வானகரக் கூட்டம், ராயப்பேட்டை ரெளடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, தி.மு.க. மீது பாய்வது என்பது, திசைத் திருப்புகிற வேலையன்றி வேறு எதுவுமல்ல. அந்தக் கட்சித் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தி.மு.க.வை எதிர்த்துதான் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.

அதிமுகவை தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லி தான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கே இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன.ஆடும் பொம்மைகளுக்கு வெற்றி வசனங்கள் எதற்கு?... பழனிசாமி எதற்காக திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டி கொள்கிறார். பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார். புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார். பழைய பழனிசாமி ஜெயலலிதா, சசிகலா காலில் விழுந்து கிடந்தார். புது பழனிசாமி மோடி, அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைய கூவத்தூர் பழனிசாமி சசிகலாவின் கால்களை நோக்கி தவழ்ந்தார். புது வானகரம் பழனிசாமி தரையில் தவழ்ந்து கரன்சிகளை கொட்டி கொல்லைப்புறமாக நுழைந்து பெற்ற பதவியால் கொள்ளையடித்த பணத்தை தனக்குத்தானே முடிசூட்டிக் கொள்ள வாரி இறைக்கிறார். இதில் `நடக்காது ஸ்டாலின் அவர்களே என்ற வெற்று வீராப்பு வசனம் வேறு'!
வழக்குகள் போட்டு திமுக பழிவாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என அவரின் ஆட்சிக் காலத்திலேயே ஒன்றிய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதுவது குரல் உயர்த்தியது உண்டா? பொதுக்குழுவில் திமுகவை நோக்கி பொங்கிய பழனிசாமி ஒன்றிய பாஜக அரசு பழிவாங்குகிறது என்று பொங்க வேண்டாம்... முணுமுணுக்க கூட தைரியம் உண்டா ?

திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது என்று வாய் கூசாமல் சொல்லிக் கொண்டு தனது ஆட்சி காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர் தான் பழனிசாமி. துணிவிருந்தால் , நேர்மை இருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுறை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி'' என தெரிவித்திருக்கிறார்.