சேலம், மேட்டூர் கொளத்தூரில் கடந்த மார்ச் 26-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு முதல் நாள், 25-ம் தேதி இரவு கூட்டத்துக்காக நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள், பேனர்களை பா.ம.க-வைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கின்றனர். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அளித்தப் புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சம்பந்தப்பட்ட நபர்கள் யாரென்று போலீஸார் பிடித்து அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
பின்னர் மறுநாள் 26-ம் தேதி அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது மாநில மகளிரணியைச் சேர்ந்த முத்துலெட்சுமி வீரப்பன் பேசும்போது, அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து பா.ம.க- வைச் சேர்ந்த தங்கராஜ், கில்லிமுத்து ஆகியோர் தகாத வார்த்தைகளில் பேசி பிரச்னையில் ஈடுபட்டனர் எனத் தெரிகிறது. அதன் பிறகு கூட்டம் முடிந்து நிர்வாகிகள் அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தபோது ஓமலூர் ஒன்றியச் செயலாளரான அன்புராஜா என்பவரின் காரை மேச்சேரி அருகே பா.ம.க ஒன்றியச் செயலாளர் துரைராஜ், சுதாகர், சிலர் வழிமறித்து காரின் கண்ணாடியை அடித்து உடைத்திருக்கின்றனர். இது குறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பா.ம.க-வினர், தங்களைப் பற்றி அவதூறாகப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்மீதும் நடவடிக்கை எடுக்கக் கூறி புகாரளித்திருக்கின்றனர்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் பேசியபோது, “கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இரண்டு பேர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை நாங்கள் முறையாகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம். இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த பா.ம.க நிர்வாகிகள் ஒருசிலர், தேவையில்லாத அரசியலாக்குவதற்காகக் கூட்டம் முடிந்து செல்லும்போது நிர்வாகிகள்மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
மேலும், இது குறித்து மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவத்திடம் பேசியபோது, “எங்கள் கட்சியைச் சேர்ந்த தேவையில்லாத நபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இது குறித்து எங்களது கட்சித் தலைவர் அன்புமணியும் விசாரித்துவருகிறார்” என்றார்.
இது தொடர்பாக மேட்டூர் டி.எஸ்.பி விஜயகுமாரிடம் பேசியபோது, “பொதுக்கூட்டத்தில் தேவையில்லாமல் தகராறில் ஈடுபட்ட நபரையும், மேச்சேரியில் கார் கண்ணாடியை உடைத்த பா.ம.க நகரச் செயலாளர் கோபால் எனும் நபரையும் நேற்றைய தினம் கைதுசெய்திருக்கிறோம்” என்றார்.