இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தபடி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்களுடன் நிறைவடைந்தது. இதற்கான தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச் 10) வெளியாகவுள்ளது. இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்பதையே பலரும் எதிர்பார்த்துவருகின்றனர். மேலும், உத்தரப்பிரதேசத்தில் நேரடியாகவே பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. ஆனால் வாக்குப்பதிவுக்குப் பின்னர் நடந்த கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க-தான் ஆட்சி அமைக்கப்போவதாகக் கூறப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``உள்ளூர் வேட்பாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன" என நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், ``தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்துகிறார்கள். முறையான பாதுகாப்பு இல்லாமல் வாக்கு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படுவதற்கு என்ன காரணம்.... எந்தவொரு தகவலும் இல்லாமல் வாக்கு இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாது. நமது வாக்குகளை நாம்தான் காப்பற்ற வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதுதான் கடைசி வாய்ப்பு. தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுவது போன்ற கருத்துக்கணிப்பை உருவாக்க பா.ஜ.க முயல்கிறது. அயோத்தியில் சமாஜ்வாடி வெற்றிபெறுகிறது. அதனால்தான் பா.ஜ.க பயப்படுகிறது" என்றார்.
