
ஓவியம்: மேரி
தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் நால்வர், சமீபத்தில் தங்கள் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையின் விரக்தியை, வார்த்தைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சொல்லிவைத்தாற்போல், அடுத்தடுத்து வருடத்தைக் குறிப்பிட்டு இவர்களின் வருத்தம் வெளிப்பட்டிருக்கிறது. அவை...
``அம்மாவின் நினைவிடத்துக்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அம்மாவுடன் நான் இருந்த காலங்கள் என் வயதின் முக்கால் பகுதி. நானும் அம்மாவும் பிரிந்ததே இல்லை. இந்த ஐந்தாண்டுக்கால இடைவெளியில், நான் என் மனதில் தேக்கிவைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்துவிட்டேன். அதிமுக-வையும் தொண்டர்களையும், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்!’’
- சசிகலா
‘‘எனக்கு வருத்தமென்றால் கொஞ்ச நஞ்ச வருத்தமல்ல. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு, மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. நாம் பலமான கட்சி. நம்முடைய பலமெல்லாம் எங்கே போனது? எனது 41 ஆண்டுக்கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே! ஆதாயத்துக்காக யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். இனி நமதுதலைமையில்தான் கூட்டணி. வேறு யாருடனும் இனி கூட்டணி கிடையாது. வீடு வீடாகச் சென்று பா.ம.க-வின் பெருமைகளை, செயல்திட்டங்களைச் சொல்லுங்கள். மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள். மாற்றத்தை ஏற்பார்கள். என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்!’’ - ராமதாஸ்

`` கண்ணகி - முருகேசன் விவகாரம் தொடர்பாக, என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இது, எனக்கு எதிரான அவதூறு அல்ல. தலித் சமூகத்தின் அரசியல் எழுச்சியை ஒட்டுமொத்தமாக காலி செய்வதற்கான சதி. இதன் மூலம் எனது 32 வருட அரசியல் வாழ்க்கையை காலிசெய்ய நினைக்கிறார்கள்.” - திருமாவளவன்
``நான் என்னுடைய வாழ்க்கையின் 56 வருடங்களைப் பொதுவாழ்வில் செலவழித்திருக்கிறேன். அதில் 28 வருடங்களில் லட்சக்கணக்கான மைல்கள் காரில் பயணித்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான மைல்கள் நடைப்பயணமாகச் சென்றிருக் கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டு ஐந்தரை வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறேன். என் மகனுக்கு அத்தகைய கடினமான நிலை வேண்டாம் என்பது என் கருத்து. என்னோடு போகட்டும் அரசியல் என்று நினைக்கிறேன்!’’ - வைகோ