‘தி கேரளா ஸ்டோரி’ எனும் திரைப்படம் கேரளா, தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பேசுபொருளாகவும், சர்ச்சைக்குரியதாகவும் மாறியிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 2-ல் வெளிவந்தது. வெளிவந்த நாள் முதல் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் இந்தத் திரைப்படத்துக்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தனர்.

இருப்பினும் நேற்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், `‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றே அறிவித்திருந்தார். அதன்படி சென்னை உள்ளிட்ட சில இடங்களில் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டமும் நடத்தப்பட்டது.
அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான், பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் விமர்சித்துப் பேசினார். ``கர்நாடகத்தில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியிருப்பது சரியல்ல. குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரான இந்தப் படத்தை பிரதமரே ஆதரித்துப் பேசுவது வேதனையாக இருக்கிறது. தேர்தல் சமயத்தில் இது போன்ற சர்ச்சையான படங்களை வெளியிடுவது எவ்விதத்திலும் சரியாக இருக்காது.

இது போன்ற படங்களை எடுக்கும்போதே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் இந்தப் படங்களை ஆதரிப்பது தவறு. இதைத்தான் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் செய்துகொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதச் செயல்களைச் செய்துவருவதே உங்கள் (பா.ஜ.க) கட்சிதான்” எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.