மதுரை மேற்குத் தொகுதியில் அரசு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆளுங்கட்சி பல்வேறு பிரச்னைகளில் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் வருகிற 22-ம் தேதி (இன்று) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநரிடம் மனு கொடுக்கவிருக்கிறோம்.
திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது. இதில் முதலமைச்சரின் மருமகன் சம்பந்தப்பட்டிருக்கிறார் என முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த ஆடியோவில் வெளியாகியிருந்தது.

அன்று நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, மதுக்கடைகளை மூடச் சொன்னார்கள். தி.மு.க-வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் ஆளுநரைச் சந்தித்து எங்களுக்கு எதிராக மனு கொடுத்தார்கள். ஆனால் இன்று அமைதியாக இருக்கிறார்கள்.
மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு செய்திருப்பதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கவேண்டியதில்லை. ஏற்கெனவே பண மதிப்பிழப்பை திடீரெனக் கொண்டுவந்தனர். ஆனால், தற்போது கால அவகாசம் கொடுத்திருக்கின்றனர். எனவே, மத்திய அரசின் இந்த விவகாரத்தில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு கிடையாது.
மதுரையில் தி.மு.க நிர்வாகி ஒருவர் வாளை வைத்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். அவர்மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். தி.மு.க ஒரு ரெளடிக் கட்சி என்பதை அவர்களே நிரூபித்துவருகிறார்கள்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிபெற பணியாற்றிவருகிறோம். தி.மு.க-வுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராக இருக்கின்றனர்.
பொய் வாக்குறுதி கொடுத்து தி.மு.க-வினர் ஆட்சிக்கு வந்தனர். தற்போது வரலாறு காணாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு ஆளுங்கட்சி அமைச்சர் துணை போயிருக்கிறார். 22 பேர் இறந்திருக்கிறார்கள், பலருக்குக் கண் பார்வை போயிருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு முதல்வர் அறிவிக்கிறார். மதுரை சித்திரைத் திருவிழாவில் இறந்தவர்களுக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. கள்ளச்சாராயம் விற்றவருக்கே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்திருக்கின்றனர்.
மதுவிலக்குத்துறை அமைச்சரின் செயல்கள் தான்தோன்றித்தனமாக இருக்கின்றன. குவாட்டருக்கு பத்து ரூபாயும், ஆஃபுக்கு 15 ரூபாயும் கூடுதலாக வாங்குகிறார்கள், கப்பம் கட்டாத அதிகாரிகள் தூக்கியடிக்கப்படுகிறார்கள்.

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், மத்தியிலும் ஆட்சி அமைக்கும் எனக் கூறுவது, அகில இந்தியக் கட்சிகள் வழக்கமாக சொல்வதுதான்.
கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது. நம் முதலமைச்சருக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அவரைத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் கர்நாடக அரசு தமிழர்களைப் புறக்கணிப்பதைப் பார்க்க முடிகிறது. எங்கள் முதலமைச்சருக்கு இப்படி ஓர் அவமரியாதையை ஏற்படுத்திய கர்நாடக அரசைக் கண்டிக்கிறேன்.

அவர் திமுக தலைவராக அல்ல, எட்டுக் கோடி தமிழக மக்களின் பிரதிநிதியாகச் சென்றிருக்கிறார். முதல்வருக்கு முக்கியத்துவம் தராதது தி.மு.க-வினருக்குச் சங்கடமாக இருக்கிறதோ இல்லையோ, எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது" என்றார்.