திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சோதனையில் கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ள சென்றபோது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவர்களை சூழ்ந்து வாகனங்களை சேதப்படுத்தினர். ஆனால், தி.மு.க தரப்பிலிருந்து, இது தவறுதலாக நடந்த சம்பவம் என்று கூறிவருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வருமான வரித்துறையினர் மீது தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தியது சட்டம் ஒழுங்கு தோல்வி என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ``இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள், அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறையினரை தங்கள் பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது தி.மு.க-வினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய தமிழக காவல்துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறையினர் வந்தது தி.மு.க-வினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்தபோது, உடனடியாக காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்...

சட்டத்துக்கு புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட தி.மு.க-வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார்.