சினிமா
தொடர்கள்
Published:Updated:

மின்தடை மீண்டும் தொடர்கதையா?

ஸ்டாலின் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் - மோடி

ஒடிசாவிலிருந்து வரவேண்டிய 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி, தற்போது 50,000 மெட்ரிக் டன்னாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மீண்டும் மின்தடைப் பிரச்னையைச் சந்தித்திருக்கிறது. கடந்த 20-ம் தேதி முதல் பல பகுதிகளில் ஏற்பட்ட இரவு நேர மின்தடை மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது. ‘மத்தியத் தொகுப்பிலிருந்து வரவேண்டிய 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டதே மின்தடைக்குக் காரணம்’ என்ற தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ``மத்திய அரசு போதுமான நிலக்கரியைத் தரவில்லை’’ என்றும் குற்றம் சாட்டினார். மின்தடை இனிமேல் தொடர்கதைதானா? மின்வெட்டுக்குக் காரணம் மத்திய அரசா, மாநில அரசா?

தமிழகத்தின் உற்பத்தி வெறும் 30%

தமிழகத்தின் ஒருநாள் மின்தேவை 15,500 முதல் 16,000 மெகாவாட் வரை. கடந்த சில நாள்களில் இது 17,000 மெகாவாட் அளவுக்கு உயர்ந்தது. பெரும்பாலும் அனல் மின் நிலையங்களை நம்பியே இந்திய மின்னுற்பத்தி இருக்கிறது. தமிழகத்தில் தூத்துக்குடி (1,050 மெகாவாட் உற்பத்தித் திறன்), மேட்டூர் (1,450 மெகாவாட்), வடசென்னை (1,830 மெகாவாட்) என மூன்று அனல்மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இவைதவிர நீர்மின் நிலையங்கள், சோலார், எரிவாயு, காற்றாலை மின் நிலையங்களும் செயல்படுகின்றன.

தமிழகத்தின் மொத்த மின் தேவையில் வெறும் 30% மட்டுமே அரசு உற்பத்தி செய்கிறது. 30% மத்திய தொகுப்பு மூலம் வருகிறது. மீதமிருக்கும் 40% தனியாரிடம் வாங்கப்படுகிறது. மத்திய தொகுப்பில் வரவேண்டிய மின்சாரம் தடைபட்டாலோ தனியார் உற்பத்தி பாதிக்கப்பட்டாலோ வெளிச்சந்தையில் போய் வாங்கவேண்டும். சந்தையில் தட்டுப்பாடு இருந்தால் பிரச்னை இன்னும் பெரிதாகும்.

மின்தடை மீண்டும் தொடர்கதையா?

கைக்கும் வாய்க்குமாக நிலக்கரி கையிருப்பு

தமிழகத்தின் ஓராண்டு நிலக்கரித் தேவை 2 கோடி டன். மத்திய நிலக்கரி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஒடிசா மாநிலச் சுரங்கங்களிலிருந்து பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் வழியாக நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தமிழகத்துக்கு வரவேண்டும். தமிழக மின் நிலையங்களின் 70% நிலக்கரித் தேவையை இந்திய நிலக்கரி நிறுவனம் தீர்க்கிறது. கூடுதல் தேவைக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, ரஷ்யா, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மின்வாரியமே நிலக்கரியை இறக்குமதி செய்துகொள்கிறது.

ஒடிசாவிலிருந்து வரவேண்டிய 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி, தற்போது 50,000 மெட்ரிக் டன்னாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின், சுரங்கங்களில் இருந்து துறைமுகங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்ல தினமும் 22 ரயில்வே ரேக்குகள் தேவைப்படும் நிலையில் ரயில்வே நிர்வாகம் 14 ரேக்குகள் மட்டுமே வழங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலக்கரிப் பற்றாக்குறையைப் போக்க 4.8 லட்சம் டன் நிலக்கரியை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யவிருக்கிறது தமிழக அரசு. மேலும், கோடையைச் சமாளிக்க 3,700 மெகாவாட் மின்சாரத்தைச் சந்தையில் கொள்முதல் செய்யவும் முடிவெடுத்துள்ளது.

பொதுவாக மின்நிலையங்கள் 24 நாள்களுக்கான நிலக்கரியைத் தங்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால் இந்தியா முழுவதுமுள்ள 150 அனல் மின் நிலையங்களில் 100-ல் நிலக்கரிக் கையிருப்பு மிக மோசமான நிலையை எட்டி யிருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. குறிப்பாக பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்தடை பெரும் பிரச்னையாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் நிலக்கரிக் கையிருப்பு கைக்கும் வாய்க்குமாகத்தான் இருக்கிறது. மின்தடையும் இப்போது தொடங்கியிருக்கிறது. இதேநிலை நீடித்தால் அது விரிவாகும் என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.

மின்தடை மீண்டும் தொடர்கதையா?

விலையேற்றம் ஏன்?

கொரோனாவுக்குப் பிறகு நாடு முழுவதும் பொருள்கள் உற்பத்தி 30% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதனால் மின்சாரத் தேவை அதிகமாகியிருக்கிறது. இது அடிப்படையான விஷயம். உக்ரைன்-ரஷ்யா யுத்தம் காரணமாக நிலக்கரி, எரிவாயு இரண்டின் விலையும் ஏறிவிட்டது. கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு மெட்ரிக் டன் நிலக்கரி 50 முதல் 60 டாலராக இருந்தது. இப்போது இந்தோனேஷிய நிலக்கரி 300 டாலர், ஆஸ்திரேலிய நிலக்கரி 200 டாலர் என விற்கப்படுகின்றன. ரஷ்யாவிலிருந்தெல்லாம் இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்டது. உள்நாட்டு நிலக்கரி போதிய அளவுக்குக் கிடைக்காத நிலையில் இந்த விலையேற்றத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கடலோர அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டது. தேவை அதிகரித்துள்ளசூழலில் மின்உற்பத்தியும் குறைக்கப்பட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுதான் நிலை.

ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள சுரங்கங்கள்தான் இந்திய நிலக்கரித் தேவையின் பெரும்பகுதியைத் தீர்க்கின்றன. வெட்டியெடுக்கும் நிலக்கரியை ரயில்வே மூலம் இந்திய நிலக்கரி நிறுவனம் மாநிலங்களுக்கு அனுப்பும். மத்திய எரிசக்தித்துறை இதைக் கண்காணிக்கும். தொடர் மழை, நிலக்கரி விலையேற்றம் ஒருபுறம் பாதிக்க, ரயில்வே, எரிசக்தித்துறை, நிலக்கரி நிறுவனங்களுக்கிடையே நிலவும் பனிப்போரும் நிலையைச் சிக்கலாக்குவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மூன்று அமைச்ச கங்களையும் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட கமிட்டி சரிவரச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.

நெருக்கடியில் நிலக்கரி நிறுவனம்

``இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் 54% தனியார் கையில் இருக்கிறது. மொத்தமாக இதைத் தனியார் கையில் தந்துவிடவே மத்திய அரசும் விரும்புகிறது. நிதி ஒதுக்கி இடம் பார்த்து நிலக்கரி வாங்கி மின் உற்பத்தி செய்ய மாநில அரசுகளும் விரும்புவதில்லை. கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் சில மணி நேரத்தில் ஒப்பந்தம் போட்டு மின்சாரம் வாங்கிவிட முடிகிறது. அதில் நிறைய லாபங்கள் உண்டு. அதுதான் படிப்படியாக நடந்துவருகிறது’’ என்கிறார், பாரதிய மஸ்தூர் சங்க மின்வாரியப் பிரிவின் அகில இந்தியத் தலைவர் முரளி கிருஷ்ணன்.

``இந்திய நிலக்கரி நிறுவனத்தில் நிறைய நிர்வாகக் குளறுபடிகள் நடக்கின்றன. திட்டமிட்டே அந்த நிறுவனத்தை அழிக்கிறார்கள். 2016-ல் இந்த நிறுவனத்தின் கையிருப்பில் 50,000 கோடி இருந்தது. மத்திய அரசு, தன் நிதிநிலையைச் சீராக்குவதற்காக இந்தப் பணத்தை வேறு பணிகளுக்குக் கொண்டு சென்றுவிட்டது. தற்போதைய உற்பத்தி பாதிப்புக்கு அதுவே முக்கியக் காரணம்.

2016-ம் ஆண்டு சில நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார் நிறுவனங்களின் கைகளில் தந்தார்கள். 130 முதல் 150 மில்லியன் டன் நிலக்கரியை இவர்கள் உற்பத்தி செய்து தருவார்கள் என்றும் சொன்னார்கள். அப்போது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 2.50 ரூபாயாக இருந்தது. மின்சாரத்தின் விலை இவ்வளவு குறைவாக இருக்கும்போது நிலக்கரி உற்பத்தி செய்தால் லாபம் கிடைக்காது என்பதால் அந்த நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க வேயில்லை...’’ என்கிறார், மின் ஊழல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் அறப்போர் இயக்கத்தின் நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன்.

ஏன் தாமதம்?

தமிழகத்தைப் பொறுத்தவரை, மின்வாரியம் மிகப்பெரும் கடன் சுமையில் தள்ளாடுகிறது. 1,20,000 கோடி ரூபாய் கடன். எல்லா ஆட்சியாளர்களும் மின்வாரியத்தைப் பொன் முட்டையிடும் வாத்தாகக் கையாள்வதே இதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டும் உண்டு. நிலக்கரி இறக்குமதி, மின்சாரக் கொள்முதல் இரண்டிலும் மிகப்பெரும் ஊழல் நடப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. மின்சார விஷயத்தில் முன்னிருந்த அரசுகளின் வழியையே தற்போதைய அரசும் பின்பற்றுகிறது என்கிறார்கள் சில அதிகாரிகள்.

``நிலக்கரி, மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்கவே தமிழக மின்வாரியம் ஆர்வம் காட்டுகிறது. கோடைக்காலத்தில் நிலக்கரித் தேவை அதிகமாகும். அதை முன்கூட்டியே கணித்து வாங்கி இருப்பு வைக்கவேண்டும். ஆனால் 4.8 லட்சம் டன் நிலக்கரி வாங்க மார்ச் மாதம்தான் டெண்டரே போட்டிருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன்பு நிலக்கரி வாங்க ஒப்பந்தம் செய்த ஒரு நிறுவனம் 1.5 லட்சம் டன் நிலக்கரியை சப்ளை செய்யவில்லை. அந்த நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்யாமல், தற்போது டெண்டரில் பங்கேற்க அனுமதித்துள்ளார்கள். ஒரு டன் நிலக்கரி 137 டாலர் என்ற விலையில் தற்போது இறக்குமதி செய்யவுள்ளார்கள். விலை குறைவாக இருக்கும்போது வாங்காமல், அதிகமாகும் வரை காத்திருந்து வாங்குவதுதான் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

நிலக்கரித் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி உற்பத்தியைக் குறைத்து, தனியாரிடம் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது, அவசர காலத்தைக் காரணம் காட்டி நிலக்கரியைத் தங்களுக்கு வேண்டியவர்களிடம் அதிக விலை கொடுத்த வாங்குவது... இதற்காக மின்வாரியம் ஆடும் நாடகமாகவே தற்போதைய மின்தடையை நாங்கள் பார்க்கிறோம்’’ என்கிறார், ஓய்வுபெற்ற மின்வாரியப் பொறியாளரும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளருமான சி.செல்வராஜ்.

தனியாருக்கு சாதகம்

ஒவ்வோராண்டும் கோடைக்காலத்தில் மின்தடை ஏற்படவே செய்யும். சென்னையில் 1 டிகிரி வெயில் அதிகரித்தால் 250 மெகாவாட் மின்தேவை அதிகரிக்கும். காற்றாலை, நீர் மின் நிலையங்களை இந்த நேரங்களில் இயக்கமுடியாது. அனல் மின் நிலையங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். ஆனால் நிலக்கரி என்பது பூமிக்குக் கீழே சுரந்துகொண்டே இருக்காது. என்றாவது ஒருநாள் தீர்ந்துவிடும். அரசு, அதற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்யவேண்டும். தமிழக அரசு இதுவரை சோலார் உட்பட வேறெந்த மாற்று மின் உற்பத்தித் திட்டத்தையும் தொடங்கவில்லை.

``2013-14-ல் 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து 2,830 மெகாவாட் மின்சாரம் வாங்க 15 ஆண்டுக்காலத்துக்கு ஓர் ஒப்பந்தம் போட்டார்கள். அப்போது 2.50 ரூபாய்தான் ஒரு யூனிட் மின்சாரம். ஆனால் 6 ரூபாய்க்கு வாங்கினார்கள். அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அப்போதே சுட்டிக்காட்டினோம். இப்போது ஒரு யூனிட் மின்சாரத்தின் சந்தை விலை 12 ரூபாய். ஆனால் ஒப்பந்தப்படி 6 ரூபாய்க்கு 2,830 மெகாவாட் மின்சாரத்தை அந்த நிறுவனங்கள் வழங்கவேண்டும். ஆனால், 1300 மெகாவாட் தான் தருகிறார்கள். மீதம் தரவேண்டிய 1530 மெகாவாட்டை வேறிடத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள். இதுகுறித்துக் கேள்வியே எழுப்பாமல், வெளியே 12 ரூபாய் கொடுத்து மின்சாரம் வாங்குகிறது தமிழக மின்வாரியம். ஒரு யூனிட் 2.50-க்கு விற்கும்போதும் 6 ரூபாய்க்கு வாங்கி தனியார் நிறுவனத்துக்கு சாதகம் செய்தார்கள். 12 ரூபாய்க்கு விற்கும்போது ஒப்பந்தப்படி 6 ரூபாய்க்கு வாங்காமல் தனியார் நிறுவனத்துக்கு சாதகம் செய்கிறார்கள். இதுமாதிரியான செயல்பாடுகளால்தான் தமிழக மின்வாரியம் விளிம்பில் தத்தளிக்கிறது’’ என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.

மின்தடை மீண்டும் தொடர்கதையா?

தனியார் கையில் தமிழக மின்வாரியம்?

2021-2022 மின்வாரியத்தின் மொத்த வருமானம் 3,57,617 கோடி. செலவு 3,60,379 கோடி. வாங்கிய கடனுக்கு வட்டி, உள்கட்டமைப்புச் செலவுகளைச் சேர்த்தால் ஒவ்வோராண்டும் பற்றாக்குறை 12,000 கோடிக்கு மேல். கடனுக்கு வட்டியும் ஏறும், படிப்படியாகக் கடனும் ஏறும். இதே நிலை தொடர்ந்தால் மின்வாரியமே இல்லாமல்போய்விடும் என்கிறார்கள்.

``தமிழகத்தைப் போலவே பல மாநிலங்களில் மின்வாரியங்கள் கடனில் தத்தளிக்கின்றன. இந்த மின்வாரியங்களை மீட்க, மின் விநியோக மறுசீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. அதில் இணைந்தால் 3 லட்சம் கோடி வரை மத்திய அரசு கடன் தரும். இதில் இணைய நிறைய நிபந்தனைகள் உண்டு. முக்கியமான நிபந்தனை மின்வாரியத்தில் தனியாரும் இணைந்து செயல்படவேண்டும். விநியோகம், பராமரிப்பில் தனியாரை அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு இந்தத் திட்டத்தில் இணைந்து ஒப்பந்த நடைமுறைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டது.

இதுவரை மின்வாரியத்திலிருந்து டிரேடிங் லைசென்ஸ் எந்த நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டதில்லை. நேரடியாக வணிகங்களை மின்வாரியமே மேற்கொண்டது. முதன்முறையாக கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு டிரேடிங் லைசன்ஸ் வழங்கியிருக்கிறார்கள். மின்சாரத்தை வாங்கவும் விற்கவும் ஏஜென்சி போல இந்த நிறுவனம் செயல்படும் என்கிறார்கள். இதுவும் கேள்விகளை உருவாக்கியிருக்கிறது’’ என்கிறார் முரளி கிருஷ்ணன்.

மின்தடை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிம்மதியையும் பறிக்கும் மிகப்பெரும் பிரச்னை. மத்திய மாநில அரசுகள் சுயலாபங்களைக் கடந்து மக்களுக்காகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரம் இது!