இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக மக்கள் அரசுக்கு எதிராகப் போராடிவருகின்றனர். போராட்டக்காரர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திவருகின்றனர். மக்கள் போராட்டம் தீவிரமடைந்துவருவதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே தன் மனைவியுடன் மாலத்தீவில் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்திருப்பதால், இலங்கையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, ``இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
சபாநாயகர் மேலும் சில புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
