`13-வது திருத்தச் சட்டம்! இலங்கைத் தமிழர் இனப் பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியாக, 1987-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில் உருவானது. சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட சட்டத்தை, தற்போது முழுவதுமாக நடைமுறைப்படுத்த வேண்டும், இந்தியா தலையிட்டு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஈழத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியிருக்கின்றனர்.'

கடந்த ஜனவரி 18-ம் தேதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் தலைமையில், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஏழு தமிழ்க் கட்சித் தலைவர்கள், இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவைச் சந்தித்து, 13-வது திருத்தத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த, இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை ஒப்படைத்தனர். இந்த விவகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமல்லாமல், சக தமிழ் கட்சிகளுக்குமிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகுறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். ``இந்தியாவிடம் தமிழ்க் கட்சியினர் முன்வைத்திருக்கும் கோரிக்கை, கடந்த 70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைக்கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தீர்வாக அவர்கள் ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்துகிறது எனவும், இந்தியாவின் கைக்குள்ளேயும், சிங்களத் தலைவர்களின் வழிநடத்தலிலும் செயல்படும் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்!" எனவும் த.தே.ம.க செயலாளரும், எம்.பி-யுமான செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டினார்.

அதேபோல அக்கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், ``13-வது திருத்தச் சட்டத்தில், நிலம், நிதி, காவல்துறை என எந்த அதிகாரமும் மாகாண சபைக்குக் கிடையாது. ஜனதிபதியால் மாகாணத்துக்கு நியமிக்கப்படும் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் உள்ளன. மேலும், மத்திய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி, மாகணங்களுக்கு இருக்கிற அதிகாரங்களையும் பறித்துக்கொள்ள முடியும்!

சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், மாகாணசபை அதிகாரத்தின் மூலம், முதலமைச்சருக்கான இருக்கையை வாங்குவதற்கும், தேநீர் குடிப்பதற்குமான செலவை ஈடுசெய்வதற்குக்கூட, ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டிய நிலையிலேயே முதலமைச்சருக்கான அதிகாரங்கள் இருக்கும். ஆகையால், 13-வது திருத்தம் ஒருபோதும் தமிழர்களின் இனப் பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியாது!" என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதி, யாழ்ப்பாணத்தில், ``13-ஐ நிராகரிப்போம், ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளை இணைக்கவும், அங்கு சுயநிர்ணய உரிமையுடன்கூடிய கூட்டாட்சி (சமஸ்டி) அமைப்பை ஏற்படுத்தவும் அரசை வலியுறுத்துவோம்" எனக் கோரி மிகப்பெரிய அளவிலான பேரணி-போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டம், மோடிக்குக் கடிதம் எழுதிய தமிழ்க்கட்சிகளிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தப் போராட்டம் குறித்து பேசிய வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், எம்.பி-யுமான சி.வி.விக்னேஸ்வரன், `13-வது திருத்தம், தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடையாது! அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் கூறினோம். ஆனால், நாங்கள் முழுமையாக ஆதரவு தெரிவித்தது போன்ற மாயையை உருவாக்கும் நோக்கில் த.தே.ம.மு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்' எனக் குற்றம்சாட்டினார்.

அதேபோல, தமிழ் ஈழ விடுதலை இயக்கச் செயலாளரும், எம்.பி-யுமான கோவிந்தன் கருணாகரன், ``தனித்தமிழ் ஈழம் கேட்டுப் போராடிய நாங்கள், 13-வது திருத்தத்தை இறுதித் தீர்வாக எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேசமயம், 2009 இறுதி யுத்தத்துக்குப் பிறகு தமிழர்களின் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம், பௌத்த விகாரங்கள் அமைத்தல், எல்லைக்குறைப்பு, ராணுவக் கட்டுப்பாடு என நம்மை முற்றாகச் சிதைக்கும் வேலையில் சிங்கள அரசாங்கம் வேகமாக ஈடுபட்டுவருவதை எண்ணிப் பார்க்க வேண்டும். கோத்தபய ராஜபக்சே செல்லும் இடமெல்லாம் `இந்த நாடு, பௌத்த நாடு; அவர்களுக்கே எனது முன்னுரிமை' என்கிறார்.

இன்னும் மூன்று மாதங்களில் இலங்கையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வரவிருக்கிறது. அதில், நிச்சயம் தமிழர்களுக்கான தீர்வு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, 13-வது திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு தற்போது இருக்கிற உரிமைகளையாவது தக்கவைத்துக்கொள்ள முடியும் என நினைக்கிறோம். ஆனால், எங்களை இந்திய முகர்வர்களாக த.தே.ம முன்னணியினர் சித்திரிக்கிறார்கள், அப்படியென்றால் அவர்கள் சீன முகவர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழ்க் கட்சியினரின் இந்த செயல்பாட்டைக் கண்டிக்கும் வகையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ``இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், அந்நிய நாடுகள் தலையிடத் தேவையில்லை, நமது நாட்டுக்குள் இருக்கும் கட்டமைப்பு முறையிலேயே தீர்வு காண முயல வேண்டும்" என எச்சரிக்கையாகக் கேட்டுக்கொண்டார்.

இலங்கையைத் திக்குமுக்காட வைத்திருக்கும் இந்த விவகாரம் குறித்து ஈழ எழுத்தாளரும், பத்திரிகையாளருமான நிலாந்தனிடம் பேசினோம். ``இலங்கை அரசாங்கம் இன்னும் சில மாதங்களில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டுவரவிருக்கிறது. அந்தப் புதிய அரசியலமைப்பில், 13-வது சட்டத் திருத்தம் அகற்றப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில்தான், குறிப்பிட்ட அந்த ஏழு தமிழ்க்கட்சிளும் இணைந்து இந்தியாவுக்கு அப்படியான கோரிக்கையை வைத்தன. ஆனால், இந்த 13-வது திருத்தம், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாகாண கவுன்சில் என்றும், அது இந்தியாவில் இருப்பது போன்ற அரை சமஸ்டி (மாநில கூட்டாட்சி) அளவுக்குக்கூட உரிமை இல்லை என்றும் கூறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றன.
மேலும், ஏழு தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைப்படியே 13-வது திருத்தத்தை புதிய அரசியலமைப்பில் இலங்கை அரசாங்கம் இடம்பெறச் செய்தாலும், தமிழ்க் கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என்ற பெயரில் தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய சட்டங்களையும் அந்த அரசியலமைப்பில் உள்ளடக்கும் எனவும் எதிர்ப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர். இப்படியாக தமிழ்க் கட்சிகளுக்குள் இந்தியா பக்கம் சென்றும், செல்லாமலும் இருவேறு போக்கு நிலவுகிறது.
உண்மையில், தமிழர் பிரச்னைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கருதினால், தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் உள் முரண்பாடுகளைக் களைந்து, மீண்டும் இந்தியாவை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கொண்டுவருவதற்கு ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களை பொறுத்தவரை அனைத்துலக சமூகம் என்பது இந்தியாதான். இந்தியாவை மீறி எந்தவொரு வெளிசக்தியும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கைத்தீவில் தலையிட முன்வராது. ஆகவே, அது 13-வது திருத்தமாக இருந்தாலும் சரி, கூட்டாட்சி, பொதுவாக்கெடுப்பு என எதுவாக இருந்தாலும் சரி, அரசற்ற தரப்பாக இருக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், 7 ஈழத்தமிழ்க் கட்சியினர் கடிதம் மூலம் முன்வைத்த கோரிக்கைக்கு, இந்திய அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில், தற்போது, ``13வது திருத்த சட்டத்தை அமல்படுத்த, இலங்கையை வலியுறுத்துமாறு, இந்திய அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும்" எனக் கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ்த் தேசியக் கட்சியினர் கடிதம் எழுதியிருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தில், ``இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவு பெற்று 12 ஆண்டுகளான பிறகும் தமிழா் பகுதிகளில் பொருளாதார வளா்ச்சி ஏற்படவில்லை. போர்க் குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் குறித்த விவகாரம் அவல நிலையில் உள்ளது. இலங்கைத் தமிழா்கள் மீண்டும் அபாயகரமான சூழலில் உள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற தமிழா்கள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டுவருகின்றனர்.

இலங்கையின் மாகாண கவுன்சில் முறையை முழுவதும் அழிக்க வேண்டும் என்று ஆளும் இலங்கை மக்கள் கட்சி வலியுறுத்திவருகிறது. இது தொடர்பான இலங்கை அரசியலமைப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா தயாரிப்பு நடைபெற்றுவருகிறது. இலங்கைக்கான இந்திய வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் தமிழகம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதன்படி, 1987-ம் ஆண்டு இந்தியப் பிரதமா் ராஜீவ் காந்தி, இலங்கை அதிபா் ஜெயவா்த்தன மேற்கொண்ட 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்!" எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.