கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் நடத்திவரும் கல்குவாரியில் விபத்து நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் பகுதியிலுள்ள மலையில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த மாவட்டத்தில் 12-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டுவருகிறன. இதில் நூற்றுக்கணக்கானோர் தினம்தோறும் வேலை பார்த்துவருகின்றனர். இந்நிலையில், இன்று காலை சுப்பிரமணியன், வினோத் இருவரும் வழக்கமான பணிகள் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில், சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வினோத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலின்பேரில் மருவத்துர்கள், போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்த ஆட்சியர் வெங்கடப்பிரியா, எஸ்.பி மணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்துவருகின்றனர். விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்குவாரி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடப்பிரியா தெரிவித்திருக்கிறார்.
என்ன நடந்தது என்று வேலை பார்த்த முனியமுத்து என்பவரிடம் பேசினோம். ``நாங்கள் தினம்தோறும் கல்குவாரியில் வேலை செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது பாறை சரிந்து விழுந்து சுப்பிரமணியன், வினோத் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கல்குவாரி நடத்துவது பெரம்பலூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் செல்வகுமார். இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.