தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாகக் கிடப்பில் போட்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். அண்மையில் மக்களவையில் இது குறித்துப் பேசிய டி.ஆர்.பாலு `நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவியைத் திரும்பப் பெற வேண்டும். மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் முக்கியப் பணி' என்றார். நாடாளுமன்றத்தில் ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரி திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி-க்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து நீட் விவகாரம் உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை விமானத்தின் மூலம் டெல்லி சென்றுள்ளார். ஆளுநர் தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி சென்றிருப்பதாக ராஜ்பவன் வட்டாரத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசின் அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், ஆளுநரின் பயணம் உற்று நோக்கப்படுகிறது.
