ஓ.பி.எஸ்., முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இருவரும் சந்தித்த அதிர்வலைகள் அடங்குவதற்குள், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன. இந்த நிலையில், இன்று சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க அதிமுக தொண்டர்களை இரண்டு கோடியாக அதிகரிக்க நகரம், கிராமன்தோறும் உறுப்பினர் சேர்க்கை நடந்துவருகிறது.
டி.டி.வி.தினகரனையும் சபரீசனையும் ஓ.பி.எஸ் சந்தித்தது குறித்து ஓர் உதாரணம் கூறலாம்.

காய்ந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன... கழுதை மேய்ந்தால் என்ன... எல்லாம் ஒன்றுதான். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் யாருக்கு எதிராகச் செய்தார்... `சசிகலா, டி.டி.வி குடும்பம் மாஃபியா கும்பல், தமிழ்நாட்டை விற்ற குடும்பம். தினகரன் அரசியல் துரோகி, அரசியல் வியாபாரி, கிரிமினல்’ என்றெல்லாம் பேசியவர் ஓ.பி.எஸ். 'சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்றரீதியில் அம்மா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது எனக் கோரிக்கை வைத்தார்.
அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், ஆறுமுக சாமி அனுப்பிய சம்மன்களுக்கு பதிலளிக்காமல், நீண்ட நாள்களுக்குப் பிறகு, `எனக்கு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமே இல்லை’ என அந்தர் பல்டி அடித்தவர். எனவே, அவர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்ததில் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. டி.டி.வி.தினகரன் - ஓ.பி.எஸ் சந்திப்பு என்பது, செந்தில் - கவுண்டமணி சந்திப்புபோல நகைச்சுவையாக இருந்தது.

`ஓ.பி.எஸ் கட்சியிலிருந்தபோதே எங்களுடன் தொடர்பிலிருந்தார்’ என ஓ.பி.எஸ் எவ்வளவு பெரிய துரோகி என்பதை டி.டி.வி.தினகரன் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு டி.டி.வி.தினகரனுக்கு நன்றி. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் போன்றவர்கள் டி.டி.வி-யை ஓ.பி.எஸ் சந்தித்தது குறித்து அதிருப்தியில் இருப்பதாகத் தெரியவந்தது. ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகிய மூன்று பேரைத் தவிர வேறு யார் வந்தாலும் எங்கள் கட்சியில் இணைந்துகொள்ளலாம்.
சபரீசன் - ஓ.பி.எஸ் சந்திப்பில் இரண்டு விவகாரங்கள் பேசப்பட்டிருக்கலாம். ஒன்று, கடல் கடந்து எங்கே முதலீடு செய்வது என ஓ.பி.எஸ் விசாரித்திருக்கலாம். அல்லது திருச்சியில் நடந்த அந்தச் சிறிய பொதுக்கூட்டம் உங்கள் ஆதரவால் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. இதுபோல இனி மாவட்டம்தோறும் நான் நடத்தவிருக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதரவு தர வேண்டும் எனப் பேசியிருப்பார்கள்.

இரண்டு அமாவாசைகள் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம். எதிர்காலத்தில் பா.ஜ.க., டி.டி.வி.தினகரனை, ஓ.பி.எஸ்-ஸைத் தனது கட்சியில் இணைத்துக்கொண்டால் அதை ஏற்க மாட்டோம். அமித் ஷா கூட எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவதில்லை எனக் கூறியிருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.