Published:Updated:

``குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க, இயற்கை வளங்களை தமிழக அரசு அழிக்கிறது" - சீமான் காட்டம்

சீமான்

``வனப்பகுதிகளில் உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை காரணமாக வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வரும் நிகழ்வுகள் அதிகரித்துவருகின்றன." - சீமான்

Published:Updated:

``குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க, இயற்கை வளங்களை தமிழக அரசு அழிக்கிறது" - சீமான் காட்டம்

``வனப்பகுதிகளில் உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை காரணமாக வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வரும் நிகழ்வுகள் அதிகரித்துவருகின்றன." - சீமான்

சீமான்

காப்புக் காடுகளைச் சுற்றி சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் போன்ற பணிகளுக்கு இருந்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதில், " தமிழ்நாட்டில் காப்புக் காடுகளைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் கல்குவாரிகள் மற்றும் சுரங்கங்களை அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசின் தொழில்துறை வெளியிட்டிருக்கும் உத்தரவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

காடு
காடு
கோப்புப்படம்

தனியார் குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக மனிதனால் உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2021-ம் ஆண்டு, நவம்பர் மாதம் தமிழக அரசின் தொழில்துறையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல், அரைத்தல் ஆகிய பணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தமிழக அரசின் தொழில்துறை அரசாணையில் அந்தத் தடை நீக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

காப்புக் காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் ஆகியவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழலை அழிக்கும் எவ்விதத் திட்டத்துக்கும் அனுமதியளிக்கக் கூடாது என்று ஐ.நா அமைப்பே வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் விதிகளும் வனவிலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் எவ்வித கட்டுமானத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று வரையறுத்திருக்கிறது.

ஆனால், அதையெல்லாம் மீறி ஒரு சில தனியார் கல்குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, அடுத்த தலைமுறைகளுக்குச் சொந்தமான மனிதனால் உருவாக்கவே முடியாத மலைகளையும், கற்களையும் வெட்டி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதித்திருப்பது பெருங்கொடுமை. ஏற்கெனவே வனப்பகுதிகளில் உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை காரணமாக வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வரும் நிகழ்வுகள் அதிகரித்துவருகின்றன.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

அது மட்டுமின்றி அவற்றின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டு வாழ்விடங்கள் சுருங்கிவருவதால் மனிதர் – வன விலங்குகள் மோதல் போக்குகளும் அதிகரித்து, இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. காடுகளின் பரப்பளவை அதிகரிக்கப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு மறுபுறம், காப்புக் காடுகளை அழிக்கும் தமிழ்நாடு அரசின் இத்தகைய அறிவிப்பு முற்றிலும் முரணானதாகும்.

ஆகவே, நாம் வாழும் பூமி, அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை உணர்ந்து, காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்திருக்கும் அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.