உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூடியது.
இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், கலந்துகொண்டு இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``2023-ம் ஆண்டுக்கான ஜி20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியிருக்கிறது.
ஜி20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜி20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவிருக்கும் கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்திருக்கும் இலக்குகளை எட்டுவதற்கும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியிருக்கிறோம். உலக அளவில் இந்தியா அளித்திருக்கும் உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றுவோம்" எனப் பேசியிருக்கிறார்.