கடலூர் மாநகராட்சியில் துணை ஆணையர் அலுவலகத்தை இன்று திறந்துவைத்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன், ``கடலூர் மாநகராட்சி, நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால் மாநகராட்சி சபை கூடுவதற்கு புதிய அரங்கு ஒன்று கட்டப்பட வேண்டும். கடலூர் உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் இன்று என்னைச் சந்தித்தார்கள். 2019-20, 2020-21-ம் ஆண்டு கல்வியாண்டில் சேர்ந்து படிக்கும் மருத்துவ மாணவர்களிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

2022-23 கல்வியாண்டு முதல் அரசுக் கல்லூரிக்கான கட்டணம் வசூலிக்கும் புதிய அரசாணையை வரவேற்று பாராட்டுகிறோம். அதேவேளையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியில் நுழைந்த மற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் அரசுக் கட்டணத்தையே செலுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளின் ஆண்டுக் கட்டணமான 13,000 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தினாலே போதும் என்று முதலில் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அது ஏனோ கைவிடப்பட்டு 4 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் சுகாதாரத்துறையின் கீழ் இணைக்கப்பட்ட பிறகு வெளியான உயர்கல்வித்துறையின் அரசாணை முரணாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅம்பேத்கரையும் மோடியையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியாது. இருவரும் வெவ்வேறு கருத்தியல்களைக்கொண்டவர்கள். முரண்பட்ட அரசியலைக்கொண்ட இருவரை ஒரு நேர்க்கோட்டில் பொருத்திப் பார்ப்பது, இருவரும் ஒரே சிந்தனையாளர்கள் என்று கற்பிக்க முனைவது ஏற்புடையது அல்ல. அதனால்தான் இளையராஜா விமர்சிக்கப்படுகிறார். புரட்சியாளர் அம்பேத்கருடன் பெரியார், ஜோதிராவ் புலே, திருவள்ளுவர் போன்றவர்களை ஒப்பிட முடியும். ஏனென்றால், இவர்கள் அனைவரும் ஒரே கருத்தியலைக்கொண்டவர்கள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் அரசியலுக்கும், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம்.

எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் இவர்களின் அரசியலை ஒரே நேர்க்கோட்டில் பொருத்தவே முடியாது. ஆனால் இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையில் அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியைப் பாராட்டியிருப்பார் என்று சொல்வதுதான், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல்தான், அதில் புதைந்திருக்கும் சூதும் சூழ்ச்சியும்தான் விமர்சிக்கப்படுகின்றனவே தவிர வேறொன்றும் இல்லை. இந்த நிலையில் மோடியைப் பற்றிப் பேசுவதற்கு அண்ணாமலை அழைப்பது அல்லது சவால்விடுவது பொருத்தமில்லாதது. இந்த விவாதமும் கவன ஈர்ப்புக்கான விவாதமாக மாற்றப்படுகிறது. அதனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து, ”தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. ஆளுநருக்கே பாதுகாப்பில்லை என்று அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கின்றனவே..?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அ.தி.மு.க தனித்து இயங்கவில்லை, பா.ஜ.க-வின் தூண்டுதலால்தான் இயங்குகிறது என்பதற்கு இதுவே சான்று. ஆளுநர் மயிலாடுதுறை சென்றபோது கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது உண்மை. ஆளுநர் சென்ற பின்பு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டு காவல்துறையினர் மீதே கறுப்புக்கொடி வீசப்பட்டது. இதைக் கொண்டு அரசியல் செய்ய பா.ஜ.க முயல்கிறது. பா.ஜ.க-வுக்கான இடத்தை விட்டுக்கொடுப்பது அ.தி.மு.க-தான். அ.தி.மு.க நாளுக்கு நாள் பலவீனப்பட்டுவருவதை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்கிறது. தன்னிச்சையாக, சுதந்திரமாக அ.தி.மு.க செயல்பட்டால் பா.ஜ.க ஒரு பொருட்டே அல்ல. அ.தி.மு.க., ஜெயலலிதா வழியில் செயல்படாமல் மோடியின் வழியில் செயல்படுகிறது என்பதை அ.தி.மு.க-வின் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை ராஜபக்சே சகோதரர்களை எதிர்த்து சிங்களவர்களே தற்போது போராட்டம் நடத்திவருகின்றனர். அந்தக் குடும்பம் பதவியிலிருந்து விலகுவதே சிறந்தது. பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக உலக நாடுகளிலிருந்து பொருளாதார உதவியைக் கடனாகப் பெற்றனர். அதை தற்போது அனுபவித்துவருகின்றனர். இதை, தேசிய அரசு என்ற பெயரில் அனைவரையும் சிக்கவைக்க ராஜபக்சே குடும்பம் ஈடுபட்டுவருகிறது. முறைப்படி தேர்தல் நடத்தி, புதிய ஆட்சி அங்கே அமைய வேண்டும். இந்திய அரசு பல ஆயிரம் கோடிகளை உதவி செய்கிறோம் என்ற பெயரில் கொட்டிக்கொடுக்கிறது. இந்தப் பணத்தால் அங்கு வாழும் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தமிழர்களுக்குத் தேவையான உதவியைச் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.