விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்திருக்கும் நிலையில், திண்டிவனம் அருகே சரவணன் என்பவரும் சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (முண்டியம்பாக்கம்) சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசியவர், "விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் அருந்தி, கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. டாஸ்மாக் என்ற அரசு அனுமதி பெற்ற மது வணிகம் இயங்கிக்கொண்டிருக்கின்றபோதே, கள்ளச்சாராய புழக்கம் இந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அதுவும், குடியிருப்புகளுக்கு அருகே சென்று விநியோகம் செய்யக்கூடிய நிலை இருக்கிறது என்றால், இது அனைவருக்கும் தெரிந்தே நடைபெற்றிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. தமிழக முதலமைச்சர், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனே நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்க ஆணையிட்டிருக்கிறார். இது ஒரு விதத்தில் ஆறுதல் அளித்தாலும் கூட, இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும். வி.சி.க-வைப் பொறுத்தவரை, முழுமையாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். அதுமட்டுமின்றி, தேசிய கொள்கையாகவே மதுவிலக்கை அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, மதுவிலக்குக் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தாத வரை, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க முடியாது.

கள்ளச்சாராயம் பெருகும் என்பதைக் காரணம் காட்டி, அரசே மது வணிகத்தை அனுமதிப்பது அல்லது அரசே நடத்துவது என்பது ஏற்புடையது அல்ல. சம காலத்தில், மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்த வேண்டும், கள்ளச்சாராய ஒழிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும். இதுதான் ஓர் அரசு செய்ய வேண்டியதாய் இருக்க வேண்டுமே தவிர, மதுக்கடைகளைத் திறக்கவில்லையென்றால்... மதுவிலக்கை அமல்படுத்தினால்... கள்ளச்சாராயம் பெருகும் என்று காரணத்தைச் சொல்லி, அரசே மது வணிகம் செய்வதும், கள்ளச்சாராய புழக்கத்தை அரசு கண்டும் காணாமல் இருப்பது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, முதலமைச்சர் அவர்கள் மதுவிலக்கைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறப்பு உளவுப்பிரிவையும் அமைக்க வேண்டும். இது போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குற்றவாளி என்று தெரிந்த பிறகு, அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். மது அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் விதவைகளாகவும், அநாதைகளாகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அவர்களை அரசே தத்தெடுத்துக்கொண்டு உதவிகளைச் செய்ய வேண்டும்.

அத்துடன், குடிநோய் என்பது தீர்க்க முடியாத ஒன்றல்ல, தீர்க்க முடியும். அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே குடிப்பழக்கம் அதிகம் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் உளவியல்ரீதியாக மருத்துவ ஆலோசனை வழங்கத் தேவையான மையங்களை ஏற்படுத்த வேண்டும். இது மிக மிக முக்கியமானது. மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த முடியாது என்றாலும், படிப்படியாக அமல்படுத்த முடியும். இதில் முதல்கட்ட நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி அவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறோம். இனி ஒருவரும் இறக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையை மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த கள்ளச்சாராயத்தைத் தடுப்பதற்கான தீவிர முன் முயற்சியை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவருகிறோம். எதிர்க்கட்சியாக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள் மதுவிலக்குக்கு எதிராக என்ன போராட்டம் நடத்தியிருக்கிறார்.

மதுவிலக்குக்காக நாங்கள் போராட வேண்டும்தான், இல்லை என்று சொல்லவில்லை. அவ்வப்போது எங்களது கருத்தை தெரிவித்துவருகிறோம். எதிர்க்கட்சியில் இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுவிலக்குக்காகப் போராட்டம் நடத்துவாரேயானால் அவருடன் சேர்ந்து குரல் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.