மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டிய 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர். இது தொடர்பாக திருமாவளவன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ''தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவிகித எம்.பி.பி.எஸ். இடங்கள், 50 சதவிகித முதுநிலை இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.

தமிழகத்தில் மொத்தம் 3,250 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றில் 490 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது. முதுநிலை மருத்துவ இடங்கள் மொத்தம் 1,758. அதில் 879 மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் செல்கிறது. இங்கே 27 சதவிகித இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றினால் எம்.பி.பி.எஸ். படிப்பில் 132 இடங்களும் முதுநிலை மருத்துவப் படிப்பில் 237 இடங்களும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கூடுதலாகக் கிடைக்கும், ஆனால், 27 சதவிகித இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததால் வருடத்துக்கு 369 மாணவர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர்.
இது அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. அதனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் உடனடியாக இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தவேண்டும்'' என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் வி.சி.க பொதுச்செயலாளருமான துரை. ரவிக்குமாரும் இது தொடர்பாக ஹர்சவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.